பிரபல நடிகர் – இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிர் பிரிந்தது.

 1980களில் ஆரம்பித்து மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன்.

தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார்.

தமிழில் அவர் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது, நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன் (தனுஷ்), ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் இவர் ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவருக்கு க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனம் இருக்கிறது.

திருமண வாழ்க்கை

பிரதாப் போத்தன் முதலில் பிரபல நடிகை ராதிகாவை காதலித்து மணந்தார். ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் அமலா சத்யநாத்தை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கேயா என்ற மகள் உள்ளார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உறவும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பிரதாப் போத்தான் சென்னை இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.