“ராம லீலா”வுக்கு எதிர்ப்பு: சென்னையில் ராமன் உருவம் எரிப்பு! த.பெ.தி.க.வினர் கைது!

வடநாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை “ராம லீலா” என்ற பெயரில் எரித்து வருகின்றனர். பார்ப்பனியத்தின் ஒடுக்குமுறையை குறிக்கும் இதை எதிர்க்கும்விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், “இராவண லீலா” நடத்தி ராமன் உருவ பொம்மையை சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு 12.10.2016 அன்று மாலை 5.05க்கு எரிப்போம் என அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டம் அறிவித்த நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் காலிகள் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க, மற்றும் இன்னும் இப்பரிவாரத்தின் துக்கடா கும்பல் பலரும் த.பெ.தி.க தோழர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலோடு தொலைபேசியில் பேசி வந்தனர். அவர்களிடம், “சொன்ன நாளில் போராட்டம் நடக்கும்” என த.பெ.தி.க தோழர்கள் பதில் சொல்லியுள்ளனர்.

ஒருபுறம் மிரட்டிப் பார்த்து அது பலனிளிக்கவில்லை என்பதால், வானரக்கூட்டம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 12.10.2016 அன்று மாலை போராட்டம் நடத்தவிருந்த சமஸ்கிருத கல்லூரி முன்பு தடிக்கொம்புகளில் கொடிகளைக் கட்டிவைத்துக்கொண்டு குண்டர் படையுடன் நின்றிருந்தனர். நாலுபேர் நின்றாலே என்ன கூட்டம் என மிரட்டும் போலீஸ், இவர்களுடன் சமரசம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் கலைவதாக இல்லை. கோவையில் அம்பலப்பட்டது போல் சந்தி சிரிக்கக் கூடாது என்று போலீஸ் வேறு வழியின்றி வானரக் குண்டர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இங்கு கோவை போல பெருங்கூட்டம் இல்லாததால் வாலைச் சுருட்டிக் கொண்டு வெறிக்கூச்சலிட்டவாறு சென்றுவிட்டது, வானரப்படை.

0a1

மறுபுறம் த.பெ.தி.க.விடம் “நாங்களே உங்களுக்கு போராட இடம் ஒதுக்கித் தருகிறோம், ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு சென்று விடுங்கள்” என நைச்சியமாக காய் நகர்த்தியது போலீஸ். “உருவப் பொம்மை எரித்தே தீருவோம்” என அவர்கள் சொன்னதால், “சரி, தீ வைத்ததும் எங்களிடம் கொடுங்கள், நாங்கள் அணைத்து விடுகிறோம்” எனப் பேசியுள்ளனர். இருப்பினும் போலிசின் வாக்குறுதியை மட்டும் தோழர்கள் நம்பிவிடவில்லை. அதன்பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் ராயப்பேட்டை அண்ணா சிலையருகில் மாலை 4.45 மணி வாக்கில் ஒன்றுகூடி புறப்படத் தயார் ஆனதும், அவர்கள் அனைவரையும் தடுப்பரண் அமைத்து நிறுத்திவிட்டது போலீஸ்.

அந்த இடத்திலேயே சென்னை மாவட்ட செயலர் தோழர் திருக்குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அதனால் பல த.பெ.தி.க –வினர் மற்றும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மற்ற கட்சியினர் சமஸ்கிருத கல்லூரி அருகே காத்திருந்து திரும்பச் சென்றனர். ஆனால் எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.

0a1a

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், குழந்தைகள் என 50 பேரை கைது செய்து இராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது போலீஸ். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்க முயன்றனர். அவர்களை மண்டபத்திற்க்குள் செல்லவிடாமல் தடுத்து அனுப்பியது போலீஸ். மேலும் உருவ பொம்மை எரித்த தோழர்கள் அனைவரையும் கட்டாயம் சிறையில் அடைப்போம் என கொக்கரித்து வந்தது போலீஸ். அதன்படி 11 தோழர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமன் படத்தை எரிப்பது என்று இந்தியாவில் எங்கேயாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? தமிழகத்தில் இது ஏன் முடிந்தது என்றால் இது பார்ப்பனிய எதிர்ப்பு மரபில் உருவான வரலாறு இருக்கிறது. தந்தை பெரியார் அந்த மரபை வரித்துக் கொண்டு மக்களிடையே பரப்பிய மண் இது. அந்த வகையில் பார்ப்பன இந்துமதவெறியர்களுக்கு தமிழகம் ஒரு கல்லறையாக இருக்கும் என்பது உறுதி.

Courtesy: vinavu.com