விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்
நடிப்பு: சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ராஜீவ் மேனன், ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ, மைம் கோபி, சுனில் ரெட்டி, நாசர், ஜார்ஜ் மரியான், காளி வெங்கட், ரகு பாபு, தீபா சங்கர், ஜாவா சுந்தரேசன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: வெங்கி அட்லூரி
ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி
படத்தொகுப்பு: நவீன் நூலி
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
கலை இயக்கம்: பங்களன்
சண்டை பயிற்சி: வி.வெங்கட்
தயாரிப்பு: சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
தயாரிப்பாளர்: சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா
வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
‘கருப்பு’ திரைப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்; 2005ஆம் ஆண்டு ‘கஜினி’யில் அம்பானி – அதானி போல் மிகப் பெரிய தொழிலதிபராக நடித்த சூர்யா, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற பிசினஸ் மேக்னட்டாக நடித்திருக்கும் திரைப்படம்; தமிழ்த்திரைக்கு வந்த குறுகிய காலத்துக்குள்ளாகவே அனைத்துத் தரப்பு ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிட்ட இளம் நடிகை மமிதா பைஜு சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் திரைப்படம்; ‘லக்கி பாஸ்கர்’ போன்ற ஃபீல்-குட் திரைப்படங்களை இயக்கி, அனைத்து திரைத்துறையினரின் பார்வையையும் தன் பக்கம் திருப்ப வைத்த வெற்றி இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள திரைப்படம்; பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ள திரைப்படம் என்பன போன்ற பல காரணங்களால் ரசிகர்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. உலகெங்கும் தற்போது திரைக்கு வந்திருக்கும் இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபராகத் திகழ்பவர் நாயகன் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா). பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரரான அவர், துப்பாக்கி சுடுதலில் அசகாய சூரரும் கூட. சர்வதேச அளவில் நடைபெற்ற ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் (பிஸ்டல் ஷூட்டிங்) போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர்.
நாற்பது வயது கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் சஞ்சய் விஸ்வநாத். அவரது அன்பான அம்மா நிர்மலா தேவி (ராதிகா சரத்குமார்) இருக்க, அவரது அப்பா விஸ்வநாத் (ராஜீவ் மேனன்) திரைப்பட நடிகை அஞ்சலி (ரவீனா டாண்டன்) மீது மையல் கொண்டு அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சஞ்சய் பத்து வயது சிறுவனாக இருந்தபோது நடந்த இந்த கசப்பான நிகழ்வு, அச்சிறுவனின் உள்ளத்தில் அப்பா மீதும் சித்தி மீதும் தீராத கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியதோடு திருமணத்தின் மீதே நிரந்தரமாக வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.
திருமணமே வேண்டாம் என்று மகன் பிடிவாதமாக இருப்பதால், வாரிசு இல்லாமல் தன் வம்சம் அழிந்துபோய்விடுமோ என்று கவலைப்படுகிறார் அம்மா நிர்மலா தேவி. அவரது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அம்மா மீது அதிக அன்பு கொண்ட சஞ்சய், அம்மாவின் கவலையைப் போக்குவதற்காக அமெரிக்கா சென்று, அங்குள்ள மருத்துவர்களைச் சந்தித்துப் பேசி, ‘வாடகைத் தாய் முறை’ மூலம் ஓர் ஆண் குழந்தையை உற்பத்தி செய்துகொண்டு, அக்குழந்தையுடன் தாயகம் திரும்புகிறார்.
சஞ்சயின் இந்த ஏற்பாடு, அம்மா நிர்மலா தேவிக்குப் பிடிக்கவில்லை. என்றபோதிலும், குழந்தை மீதுள்ள அன்பால் அதை ஏற்றுக்கொள்கிறார். பேரனுக்கு ‘அபய்’ என்று பெயர் சூட்டி, பாசத்துடன் பராமரித்து வளர்க்கிறார்.
இதனிடையே, பச்சிளம் குழந்தை அபய்க்கு ‘எலும்பு மஜ்ஜை நோய்’ எனும் அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தையைக் காப்பாற்ற ‘எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplantation)’ செய்ய வேண்டியது அவசியம் என்றும், அதற்கு அக்குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் எலும்பு மஜ்ஜை தேவை என்றும் மருத்துவர்கள் கூறுவதால், சஞ்சய் மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.
அங்கு அபய்யின் ’வாடகைத் தாயான’ 20 வயது மேடியை (மமிதா பைஜு) முதல்முறையாக சந்திக்கிறார் சஞ்சய். மேடி மருத்துவம் பயிலும் மாணவி. பெற்றோர் இல்லாததால், அனாதை இல்லத்தில் வளர்ந்தவர். என்றபோதிலும், சதா துறுதுறுவென்று இருக்கும் படுசுட்டிப் பெண். அவர் பல லட்சம் அமெரிக்க டாலர்களை சஞ்சயிடம் கூலியாகப் பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார். குழந்தை அபய்க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது.
இதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களால் மேடிக்கு அபய் மீது தாய்ப்பாசம் வருகிறது. அந்த பாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, அது சஞ்சய் மீதான காதலாகவும் மாறுகிறது. சஞ்சய்யை திருமணம் செய்துகொண்டு அபய்க்கு அம்மாவாக இங்கேயே இருந்துவிடலாம் என்று ஆசைப்படுகிறார் மேடி. ஆனால், சஞ்சய்யோ, திருமணத்தை வெறுப்பவர். மேலும், தனக்கும் மேடிக்கும் 20 வயது வித்தியாசம் இருப்பதால், தங்களுக்கிடையே திருமணம் என்பது சரிப்பட்டு வராது என்று மேடியின் காதலை நிராகரிக்கிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? திருமணம் மீதான வெறுப்பை சஞ்சய் கைவிட்டாரா? அப்பாவின் இரண்டாவது மனைவியான அஞ்சலி மீதான கோபம் மறைந்ததா? சஞ்சய்யும் மேடியும் இல்வாழ்கையில் இணைந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு காமெடியும், எமோஷனும் கலந்து விடை அளிக்கிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக, மிகப் பெரும் செல்வந்தர் சஞ்சய் விஸ்வநாத்தாக சூர்யா நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான ஸ்டைலிஷ் லுக்கிலும், க்ளாஸான மேனரிசத்துடனும் படம் முழுக்க வருகிறார். திரையில் அவரை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று எண்ணுமளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். உலகத்தாருக்கு பெரிய தொழிலதிபர், அம்மாவுக்கு அன்பான மகன், மகனுக்கு பொறுப்பான அப்பா என அனைத்து அம்சங்களிலும் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். இயல்பான நகைச்சுவை, நேர்த்தியான எமோஷன், அட்டகாசமான அதிரடி ஆக்ஷன் என எல்லா வகையிலும் முழு பேக்கேஜாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக, அமெரிக்காவில் மருத்துவம் பயிலும் மாணவி மேடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். அவரது முழு நடிப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகையை நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு சூர்யாவோடு போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார். படம் முழுக்க தனது துறுதுறு குறும்புத்தனத்தால் கவர்கிறார். எந்த ஒன்றையும் காமெடியாக்கி, கலகலப்பூட்டி ரசிக்க வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார். பிள்ளைப் பாசத்திலும், காதலிலும் அவர் ஏங்கும் காட்சிகளில் நடிப்பு அருமை. அவரது கரியரில் இந்த படம் ஒரு மைல் கல்.
நாயகனின் அம்மா நிர்மலா தேவியாக ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். தனது இயல்பான அனுபவ நடிப்பால் காமெடியையும், எமோஷனையும் கலந்துகட்டி வாரி வழங்கி, தன் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.
நாயகனின் அப்பா விஸ்வநாத்தாக வரும் ராஜீவ் மேனன், அவரது இரண்டாவது மனைவி அஞ்சலியாக வரும் ரவீனா டாண்டன், அவரது மகளாக வரும் பவானிஸ்ரீ மற்றும் மைம் கோபி, சுனில், நாசர், ஜார்ஜ் மரியான், காளி வெங்கட், ரகு பாபு, தீபா சங்கர், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்கும் கதாநாயகன் மீது கதாநாயகி காதல் கொள்வது என்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் ஏற்கெனவே வந்துள்ளன. 1966-ல் வெளிவந்த என்.டி.ராமாராவின் ‘ராமு’, 1983-ல் வெளிவந்த பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’, 2002-ல் வெளிவந்த நாகார்ஜுனாவின் ‘சந்தோஷம்’ போன்றவை இதற்கு உதாரணங்கள். இந்த படங்களுக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’க்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், நாயகன் சஞ்சய் விஸ்வநாத் திருமணம் ஆகாதவர்; திருமணம் செய்துகொள்ள விருப்பமும் இல்லாதவர். அதனால், தேக சேர்க்கை இல்லாமல் ‘வாடகைத் தாய் முறை’யில் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆகிறார். அந்த வாடகைத் தாய் பின்னொரு நாள் அக்குழந்தையின் தந்தை மீது காதல் கொள்கிறார். இந்த வேறுபாட்டைப் புகுத்தி, புதுமைகள் சேர்த்து திரைக்கதை அமைத்து, அற்புதமான நடிகர்கள், அருமையான வசனங்கள் மற்றும் காமெடியும் எமோஷனும் கலந்த உணர்ச்சிகள் ஆகியவற்றுடன் தன் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி. படத்தின் இரண்டாம் பாதியை மாற்றி யோசித்து சுருக்கியிருந்தால், படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, நிமிஷ் நூலியின் ஒளிப்பதிவு, பங்களனின் கலை இயக்கம், வி.வெங்கட்டின் ஸ்டண்ட் வடிவமைப்பு உள்ளிட்ட தரமான தொழில்நுட்பங்கள் இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’: சூர்யா – மமிதா பைஜுவின் அட்டகாசமான நடிப்பில், அருமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் வந்திருக்கும் அழகான ஃபீல்-குட் திரைப்படம்; குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 4/5.
