தவெக ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு: விஜய் நேரில் நன்றி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.
2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்தார்.
இடதுசாரிகள் ஆதரவு:
பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் தலைவர்களை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரினர்.
இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்த இடதுசாரி கட்சிகள், இறுதியில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக நேற்று அறிவித்தன.
இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிடிஆர். நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன்மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே, விசிக தலைவர் திருமாவளவனுடனும் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடதுசாரி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தனது முடிவை இன்று (மே 9) காலை தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
நேரில் நன்றி:
நேற்று (மே 8) மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகை சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை 3-வது முறையாக சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை வழங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்ற விஜய், அங்கு அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. திருமாவளவன் தனது முடிவை இன்று காலை அறிவிக்க உள்ளார். அதன் பிறகு, தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உறுதி செய்யப்பட்ட பிறகே, ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று தெரிகிறது.
பேபி திடுக்கிடும் தகவல்:

அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு திமுக கேட்டது. ஆனால், அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம் என்ற திடுக்கிடும் தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அவர்களை கலந்தாலோசிக்காமலேயே வெளியேறியது.
ஆனால், எங்களை பொறுத்தவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்தோம். எங்களது மாநில தலைவர்கள், அவரை சந்தித்து பேசியபோது, திமுக ஆதரவுடன் ஒரு அரசை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது, அதிமுக தலைமையிலான அரசை திமுக வெளியில் இருந்து ஆதரிக்க இருப்பதாக தெரிவித்தனர். மற்ற விவரங்கள் எதையும் எங்களிடம் கூறவில்லை. ஆனால், திமுக என்ன செய்ய விரும்புகிறது என்பதை எங்களிடம் நியாயமான முறையில் கலந்தாலோசித்தனர். அதை நாங்களும் ஆதரிக்க வேண்டும், அவர்களது அணுகுமுறையை நாங்களும் பின்பற்ற வேண்டும் என்று திமுக விரும்பியது. நாங்கள் திமுகவை எதிர்க்கப் போவதில்லை.
ஆனால், பாஜக கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்த அதிமுகவை ஆதரிக்கும் அரசியல் முடிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, தமிழக சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவாகிய தவெகவுக்கு எங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
