“ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் நயன்தாரா ‘LIK’ படத்துக்கு கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது”: இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன்வெளியீட்டு விழா தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது:
இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது.
நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போனபோது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — திரையரங்குக்குள் வரக்கூடிய அந்த பார்வையாளர்களுடன் எனக்கு இருக்கும் அந்த ஒரு கனெக்ஷன். அதுதான் என் நம்பிக்கை. ஏப்ரல் 10ஆம் தேதி அந்த நம்பிக்கை நிரூபிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
இந்த மேடையில் என்னோடு சிலரை நிற்கச் சொல்லணும் என்று தோன்றுகிறது. முதலில் மயில்வாகனம் சார். நான் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது அவர் எனக்கு 150 ரூபாய் பேட்டா கொடுத்தார். ஆனால் வவுசரில் 150 இருந்தாலும், கையில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அப்போ நான் முடிவு செய்தேன் — “நாளைக்கு அவர் தயாரிப்பாளராக ஆகணும்” என்று. அந்த நாளே நான் அவருடைய நம்பரை “மயில்வாகனம் – ப்ரொட்யூசர்” என்று சேவ் செய்தேன். இன்று அவர் உண்மையிலேயே தயாரிப்பாளராக இருக்கிறார். இது என் நம்பிக்கை, என் மனதில் வைத்திருந்த விஷயம்.
இந்த படம் ஆரம்பத்தில் 150–200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் அது அப்படி நடக்கவில்லை. பல தடைகள் வந்தது. அந்த நேரத்தில் நான் சின்னதாக, சிம்பிளாக ஒரு படம் பண்ணினேன். பிறகு ஒரு நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நெப்பியர் பாலத்தை கருப்பு-வெள்ளையாக மாற்றி ஷூட் பண்ணினோம். அந்த இரவு எனக்கு ஒரு உணர்வு — “இந்த ஃபியூச்சர் படம் கண்டிப்பா நடக்கும்” என்று. ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் நினைத்ததை திரையில் காட்ட முடியும். மழை வேண்டும்னா மழை வரும். நிறுத்தணும்னா நிறுத்தலாம்.
கனவுகளை நிஜமாக்க முடியும். அப்படித்தான் இந்த படமும். நான் பார்க்க விரும்பிய சென்னை, நான் கற்பனை செய்த எதிர்காலம் — எல்லாத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.
இந்த பயணத்தில் எல்லாமே ஒரே இரவில் மாறி போன தருணங்களும் இருந்தது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னோடு நம்பிக்கையுடன் இருந்த சில பேர் இருக்காங்க. இந்த எல்லாரும் எனக்கு வெறும் டீம் இல்லை. என் கனவை நம்பியவர்கள். நாளைக்கு இவர்கள் எல்லாரும் பெரிய இடத்துக்கு போவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரதீப்புக்கு நான் மெசேஜ் பண்ணி, “உங்களை மீட் பண்ணணும், கதை சொல்லணும்”ன்னு கேட்டேன். அவர் “ஓகே”ன்னு சொன்னார். நான் போய் கதை சொல்லும்போது அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. அடுத்த நாளே “பண்ணலாம்”ன்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் ப்ரொடக்ஷன் விஷயங்களில் எல்லாம் செட்டாகல. பெரிய பட்ஜெட், டிலே, டிலேன்னு போய்ட்டே இருந்துச்சு. அந்த படம் முன்னாடியே நின்றதால எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. அங்கிருந்து வெளியே வந்து, எப்படியாவது இந்த படத்தை அவரோட சேர்ந்து பண்ணணும் என்று நானே கன்வின்ஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் அவருக்கு வேறு பெரிய வாய்ப்புகள் வந்தாலும், எனக்காக அவர் அந்த வாய்ப்பை விட்டுட்டு என்னோட கூட நின்றார். அதற்காக நான் வாழ்க்கை முழுக்க நன்றியுடன் இருப்பேன் பிரதீப். ஐ லவ் யூ.
அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் அவர் நடித்த விதம் — டெல்லியில் ஒரு முக்கியமான இன்டர்வல் சீன் எடுத்துக் கொண்டிருந்தோம். ரொம்ப எமோஷனல் சீன். அந்த நேரத்தில் வெளியில பெரிய குழப்பம், சண்டை, சத்தம். எங்க டீம் அங்கே செட்டில பிரச்சனையோட இருந்தாங்க. அந்த சூழ்நிலையில் எந்த நடிகரா இருந்தாலும் “எனக்கு கான்சென்ட்ரேட் பண்ணணும்”ன்னு சொல்வாங்க. ஆனா பிரதீப் அந்த சூழ்நிலையே புரிஞ்சுக்கிட்டு, திரும்ப திரும்ப டேக் கொடுத்து, “பண்ணலாம் ப்ரோ”ன்னு சொல்லிட்டு அந்த சீனை முடிச்சார். அந்த நேரத்தில் அவர் ஒரு ஹீரோவா இல்ல, ஒரு டைரக்டரா என்னோட வலியை புரிஞ்சுக்கிட்டு வேலை செய்தார். அந்த இன்டர்வல் சீனை நான் இப்போயும் பார்க்கும்போது, “இப்படி ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு நடிப்பு கொடுக்க முடிஞ்சா, எதுவும் முடியும்”ன்னு தோணும். அவர் ரொம்ப கிஃப்டட், ரொம்ப டேலண்டட் — ரைட்டர், டைரக்டர், ஆக்டர் எல்லாத்திலும். அவர்கிட்ட இருந்து நான் நிறைய கற்றுக்கிட்டேன். என்னை ரிஃபைன் பண்ணிக்கிட்டேன். நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார்.
அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்தபோது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை.
பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல. ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் ’மூக்குத்தி அம்மன்’ பட அட்வான்ஸ் என்று, எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். நன்றி.
# # #
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
