“பெண்களை தரக்குறைவாக விமர்சிக்க கூடாது”: தனது ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை!

பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் விஜய்யின் சுறா படத்தை விமர்சனம் செய்ததையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தன்யா ராஜேந்திரன் மீது தரம் தாழ்ந்து ஆபாசமாக வசைமாரி பொழிந்து வருகிறார்கள். அவருக்கு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன.

ரசிகர்களின் இச்செயல் குறித்து விஜய் எதுவும் சொல்லாமல் மவுனம் சாதிப்பது குறித்து தன்யா ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், விஜய் ரசிகர்களின் இச்செயலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து விஜய் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:

சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்துச் சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.

அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.