தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: பொருளாளர் வேட்பாளர் விடியல் ராஜுக்கு ஆதரவு பெருகுகிறது!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது. இதனால் 2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) நடைபெறவுள்ளது.
நடைபெற உள்ள தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும், தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் ஒருஅணியும் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாக தலைவர் பதவிக்கு கடந்த முறை போட்டியிட்ட மன்ன்ன், பொருளாளர் பதவிக்கு விடியல் ராஜு, செயலாளர் பதவிக்கு கதிரேசன், துணைத் தலைவர் பதவிக்கு சதீஷ்குமார், நடிகர் உதயா, இணை செயலாளர் பதவிக்கு விஜயசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இரண்டு அணிகளும் கரன்சி, அன்பளிப்புகள் என வாரி வழங்கி வாக்கு கேட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், வரும் தேர்தல் களத்தில் சுயேச்சையாக போட்டியிடும் விடியல் ராஜு எந்தவித அன்பளிப்புகளும் கொடுக்காமல் தனது கடந்தகால செயல்பாடு, தேர்தல் களத்தில் களப்பணி, வாக்கு சேகரிக்கும் தனித்த அணுகுமுறை ஆகியவற்றால், அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் சுபாஷ் சந்திர போஸ், விஜயகுமார் ஆகிய இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிராக கடுமையான போட்டியாளராக மாறியுள்ளதுடன், வெற்றியை எட்டிப் பிடிக்கும் வேட்பாளராக விடியல் ராஜு இருக்கிறார் என்கின்றனர், அவரை ஆதரிக்கும் தயாரிப்பாளர்கள்.
சென்னை பூர்வகுடியான விடியல் ராஜு “ஆளு” என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக, நடிகராக திரையுலகில் பிரவேசித்தவர். இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட விருதையும், அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பெற்றுள்ளார்.
திரைத்துறை சார்ந்தவர்களுக்கான வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பணியாற்றி இன்றுவரை வாரியம் முடங்கி விடாமல் இருக்க காரணமானவர் விடியல் ராஜு என்பதுடன், தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி, பிரச்சினை என தகவல் கிடைத்தாலே அழையா விருந்தாளியாக ஆஜராகி விடுவார் விடியல் ராஜு என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
எந்த அணியிலும் இணையாமல் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் விடியல் ராஜு தேர்தல் தொடக்க காலத்தில் எந்த பின்புலமும் இல்லாத சாமான்யராக கருதப்பட்டார். ஆனால், தேர்தல் களத்தில் அவரது தொடர்ச்சியான செயல்பாடு, வாக்கு கேட்கும் பாணி காரணமாக பிரதான போட்டியாளராக மாறியுள்ளார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் செட்டியார்கள் என்றும், அதனாலேயே இராமநாராயணன், அவரை தொடர்ந்து முரளி ராமசாமிக்கு அசைக்க முடியாத வாக்கு வங்கி இருந்து வருகிறது என்றும், கமீலா நாசருக்கு அவரது சிறுபான்மை சமூகத்தவர் வாக்குகள் அவருக்கு மட்டுமே கிடைக்கும் என்கிற சூழல் நிலவி வருகிறது என்றும், அதே போன்று கணிசமான வாக்குரிமையுள்ள நாயுடு சமூகத்தினர் விடியல் ராஜுக்கு வாக்களிக்க தீவிரமான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
முரளி ராமசாமி, தமிழ்குமரன் அணியை விரும்பாதவர்கள் பெரிதும் விரும்பக்கூடிய வேட்பாளராக விடியல் ராஜு இருப்பதால் அவரது வாக்கு சதவீதம் அதிகரித்து பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்களில் முதல் இடத்தை நோக்கி முன்னேறும் வெற்றி வேட்பாளராக விடியல் ராஜு இருக்கிறார் என்கின்றனர் தேர்தல்கள நிலவரத்தை கவனித்து வரும் மூத்த தயாரிப்பாளர்கள்.
விடியல் ராஜுவின் ஆதரவாளரான ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் தர்மராஜ் வேலுச்சாமி கூறியிருப்பதாவது:-

“சிறுபட தயாரிப்பாளர்களுக்கு இனிய காலை வணக்கம்.
நமது நலனைக் காக்க…
எந்த நேரத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள…
முன்னிலை நின்று தீர்வு ஏற்படுத்திக் கொள்ள…
வெளிப்படையாக பேசி உதவும் நல்ல உள்ளம் கொண்டவர்…
சுயேச்சை பொருளாளர் வேட்பாளர் அண்ணன்
திரு விடியல் ராஜு அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம்! நமது நலனை காப்போம்! அதற்கு ஆதரிப்பீர்!”
