“ஆட்சியிலும், கட்சியிலும் தலையிட கூடாது”: உறவினர்களுக்கு சசிகலா எச்சரிக்கை!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அப்போது அவரது உடலை சுற்றி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களான ‘மன்னார்குடி கும்பல்’ இருந்தது,  சமூக  வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட மன்னார்குடி கும்பல், அவர் மறைந்தவுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயல்வது, அ.தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சசிகலா தனது நெருங்கிய உறவினர்கள், சகோதரர்கள், மைத்துனர்கள் மற்றும் சகோதரர்களின் மகன் – மகள்கள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் தமிழக அரசின் நிர்வாகத்திலும், அ.தி.மு.க. கட்சி நடவடிக்கைகளிலும் தலையிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளார் என சசிகலா உறவினர்கள் கூறியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டு உள்ளது

மேலும் அந்த செய்தியில், “கடந்த புதன் கிழமை போயஸ் கார்டனில் கூட்டிய   தனது குடும்ப உறுப்பினர்களின் கூட்டத்தில் சசிகலா  இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளார். மறு நாள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து தனது குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் என சசிகலா  கூறியதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

”சசிகலா  தொடர்ந்து  போய்ஸ் தோட்ட இல்லத்திலேயே தங்குகிறார். தற்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்குதான் உள்ளனர். அவர்கள் சென்ற பிறகு அவரது அண்ணன் மனைவி இளவரசி மட்டும் சசிகலாவுடன் தங்குவார்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறுதி காலகட்டத்தில் அவருடன் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மட்டுமே போயஸ் இல்லத்தில் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.