மார்கன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், மகாநதி சங்கர், சமுத்திரகனி, ராமசந்திரன், பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா மற்றும் பலர்
இயக்கம்: லியோ ஜான் பால்
ஒளிப்பதிவு: எஸ்.யுவா
படத்தொகுப்பு: லியோ ஜான் பால்
இசை: விஜய் ஆண்டனி
தயாரிப்பு: ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ ஃபாத்திமா விஜய் ஆண்டனி
பத்திரிகை தொடர்பு: ரேகா
உலகெங்கிலும் ‘புலனாய்வு கிரைம் திரில்லர்’ ஜானரில் ஏற்கெனவே பல்லாயிரம் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் அனுதினமும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. எதிர்காலத்திலும் நிறைய வரும். என்றாலும், எப்போதும் சலிப்புத் தட்டாமல், மவுசுடன் இருந்துவரும் ஜானர்களில் இந்த ‘புலனாய்வு கிரைம் திரில்லர்’ ஜானரும் ஒன்று.
இது தெரிந்ததாலோ, என்னவோ, தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘மார்கன்’ உட்பட, விஜய் ஆண்டனி நாயகனாக நடிப்பதற்கு, வித்தியாசமான கதைக்களங்களுடன் தேர்வு செய்த பெரும்பாலான படங்கள் இந்த ஜானரைச் சேர்ந்தவை தான். மேலும், பல வெற்றிப்படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ள பிரபல படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலை இந்த ‘மார்கன்’ படத்தில் அறிமுக இயக்குநராக உயர்த்தி, அவருடன் கைகோர்த்துள்ளார் விஜய் ஆண்டனி. அதோடு, தனது சகோதரியின் மகன் அஜய் தீஷனை அவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகம் செய்து, ஒரு தாய்மாமனுக்கு உரிய கடமையை நிறைவு செய்திருக்கிறார். இத்தனை சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்திருக்கும் ’மார்கன்’ திரைப்படம் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறதா? பார்ப்போம்…
சென்னையில், ஓர் இரவில், தனியே நடந்து செல்லும் அழகிய பெண் ஒருவரை ஒரு மர்ம நபர், திடீரெனப் பிடித்துக் கொண்டுபோய், அப்பெண்ணின் உடம்பில் கொடிய ரசாயனத்தைச் செலுத்தி, தலை முதல் பாதம் வரை முழு உருவத்தையும் கன்னங்கரேலென கருப்பு நிறத்துக்கு மாற்றி, உயிரிழக்கச் செய்து, பின்னர் அச்சடலத்தை குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட்டு போகிறார்.
மும்பையைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி துருவ் (விஜய் ஆண்டனி), மேற்கண்ட சென்னைச் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். காரணம், இதற்குமுன் அவரது அன்பான மகள் மர்மமான முறையில் இதே விதமாய் கரிக்கட்டை போல் கருப்பாக்கி கொல்லப்பட்டு, குப்பைக் குவியலுக்குள் பிணமாகப் போடப்பட்டிருந்தார். மட்டுமல்ல, அவ்வழக்கு பற்றி புலனாய்வு செய்யத் தொடங்கிய துருவையும் இதே முறையில் கொல்ல முயற்சி நடந்தபோது, அவர் பாதி உடம்பு கருப்பாகும்போதே உயிர் தப்பிப் பிழைத்து விட்டார். அதனால், அவரது முகம் உட்பட உடம்பின் சரிபாதி இப்போதும் கருப்பாகவே இருக்கிறது.
இப்படி ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரிப்பதற்காக துருவ் சென்னை வருகிறார். துருவைப் பற்றி நன்கு அறிந்த இங்குள்ள போலீஸ் உயர் அதிகாரி (சமுத்திரக்கனி), துருவிடமே இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதோடு, புலனாய்வில் அவருக்கு உதவுமாறு இன்ஸ்பெக்டர் ஸ்ருதியையும் (பிரிகிடா) நியமிக்கிறார்.
விசாரணையைத் தொடங்கும் துருவுக்குக் கிடைக்கும் தடயங்கள் மூலம் அவரது சந்தேகப்பார்வை, நீச்சல் வீரர் தமிழறிவு (அஜய் தீஷன்) மீது விழுகிறது. தமிழறிவைப் பிடித்து, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்கிறார் துருவ். தமிழறிவின் விசித்திர செயல்களுக்கு இடையே, அவருக்கு எவருக்கும் இல்லாத அபார ஞாபக சக்தியும், நம்பவே முடியாத தனித்துவமான சில திறமைகளும் இருப்பது தெரியவருகிறது.
ஒரு கட்டத்தில், தமிழறிவு கொலையாளி இல்லை என்ற முடிவுக்கு வரும் துருவ், உண்மையான குற்றவாளி யார் என்பதை தமிழறிவின் அபார ஞாபக சக்தியையும், அவரது தனித்துவமான திறமைகளையும் பயன்படுத்தி கண்டுபிடிக்க முயல்கிறார்.
எனில், உண்மையான கொலையாளி யார்? கொலைக்கான பின்னணி என்ன? எவருக்கும் இல்லாத அபார ஞாபக சக்தியும், தனித்துவமான திறமைகளும் தமிழறிவுக்கு மட்டும் வாய்த்தது எப்படி? அவற்றை துருவ் எப்படி பயன்படுத்தி, கிரைம் முடிச்சுகளை அவிழ்க்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘மார்கன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, சீரியல் கொலையாளியைப் பிடிக்க புலனாய்வு செய்யும் முன்னாள் போலீஸ் அதிகாரி துருவ்வாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். படம் முழுக்க, முகம் உட்பட உடம்பின் சரிபாதியில் கருப்பு நிறம் தாங்கி வரும் அவரது தோற்றம் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கவனம் சிதறாமல் கருமமே கண்ணாக அவர் வழக்கு விசாரணையை தீவிரமாக நடத்திச் செல்வது ரசிப்புக்கு உரியதாக இருக்கிறது. அவரது சீரியஸான நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.
இரண்டாவது நாயகனாக, நீச்சல் வீரர் தமிழறிவாக அறிமுக நடிகர் அஜய் தீஷன் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகர் போல் தன் கதாபாத்திரத்தில் அழுத்தமாகவும், அதே நேரத்தில் அசல்டாகவும், திறமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ’விளையும் பயிர் முளையில் தெரியும்’ என்ற பழமொழிக்கு ஒப்ப, அறிமுகப் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். திரைத்துறையில் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துகள் அஜய் தீஷன்.
நாயகனின் புலனாய்வுப் பணிக்கு உறுதுணையாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ருதியாக பிரிகிடா நடித்திருக்கிறார். படம் முழுவதும் நாயகனுடன் வரும் நல்வாய்ப்பு. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சுறுசுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
சென்னை போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, சிரிப்புக் காட்டும் கான்ஸ்டபிள் காளியாக வரும் மகாநதி சங்கர், முருகவேலாக வரும் ராமச்சந்திரன், ரம்யாவாக வரும் தீப்ஷிகா, மற்றொரு ரம்யாவாக வரும் நிஹாரிகா, தமிழறிவின் தங்கை அகிலாவாக வரும் அர்ச்சனா, வெண்ணிலாவாக வரும் கனிமொழி, உதவி கமிஷனராக வரும் வினோத் சாகர், மூத்த நரம்பியல் நிபுணராக வரும் நடராஜ், ஐ.டி ஹெச்ஆர் ஆக வரும் அருண் ராகவ், புரோக்கர் ஏஜெண்டாக வரும் கதிர், போட்டோகிராபர் லட்சுமண் கார்த்திக்காக வரும் ராஜாராம், இயக்குநர் ராஜேஷாக வரும் அபிஷேக் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
விஷ்ணு மற்றும் லியோ ஜான் பால் கூட்டாக திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். இவர்களது திரைக்கதை வழக்கமான புலனாய்வு திரில்லர் பாணியில் இருந்தாலும், அதில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு, சித்தர்கள் பற்றி நம்பமுடியாத கப்சாக்களை அள்ளித் தெளித்து திரைக்கதையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்.
சித்தர்கள் என்போர், அக்காலத்தில் வாழ்ந்த சீர்த்திருத்தக்காரர்கள். அன்றைய சனாதன மனுதர்ம ஆதிக்கவாதிகளுக்கு எதிரான முற்போக்குக் கருத்துக்களை, அவர்கள் வெகுமக்களிடையே பாடலாகப் பாடி பரப்பினார்கள். (’சித்தர்கள் பாடல்கள்’ எனும் நூலை ஊன்றிப் படித்தாலே இவ்வுண்மையை உணர்ந்துகொள்ளலாம்.) அவர்களால் தங்கள் இருப்புக்கு ஆபத்து என்பதாலேயே அவர்களை ஆதிக்கவாதிகள் காடுகளுக்குள் துரத்தியடித்தார்கள். மட்டுமல்ல, ”சித்தர்கள் மாய்மாலம் செய்பவர்கள்; கூடுவிட்டு கூடு பாயும் மாயாஜாலக்காரர்கள்; அமானுஷ்ய சக்தி கொண்டவர்கள்; ஆமையாக, மீனாக, மானாக இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள்” என்றெல்லாம் ஆதிக்கவாதிகள் தினுசு தினுசாக அச்சமூட்டும் கப்சாக்களைப் பரப்பினார்கள் இன்றும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல், இப்படத்துக்கு திரைக்கதை எழுதிய விஷ்ணுவும், லியோ ஜான் பாலும் ஆதிக்கவாதிகளின் கப்சாக்களுக்கு பலியாகிவிட்டார்கள் என்பது வருத்தத்துக்கு உரியது.
இப்படத்தை இயக்கி, அறிமுக இயக்குநராகி இருக்கிறார் லியோ ஜான் பால். இவர் ஏற்கெனவே பல வெற்றிப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி அனுபவம் பெற்றிருப்பதால், எந்தக் காட்சி எவ்வளவு இருக்க வேண்டும் என்ற புரிதலுடன் இப்படத்தை போரடிக்காமல், விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். இரண்டாம் பாதியின் பின்பாதியில் வரும் காட்சிகள் படத்துக்கு பலம்.
விஜய் ஆண்டனியின் இசையில் வரும் பாடல்கள் கதையோடு ஒன்ற வைக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா, ’புலனாய்வு கிரைம் திரில்லர்’ பாணிக்குப் பொருத்தமாக காட்சிகளைப் படமாக்கி, படத்தின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருந்துள்ளது.
‘மார்கன்’ – எதிர்பாராத திருப்பங்களுக்காகப் பார்த்து ரசிக்கலாம்
ரேட்டிங்: 3/5.