இந்த அறையின் எதிரொலிகளை விரைவில் உலகம் முழுதும் வேறு பல மேடைகளிலும் எதிர்பார்க்கலாம்!

ஆஸ்கார் விருது விழாவில் வில்ஸ் ஸ்மித் தன் மனைவியை உருவ கேலி செய்த நடிகரை மேடையேறி அறைந்தது இன்று பரபரப்பான உலகச் செய்தி.

எதிர்வினை கண்டிப்பாக இருக்காது, சபை நாகரிகம் பார்ப்பார்கள், கடுப்பானால்கூட பிறகு பேட்டியில் சொல்வார்களே ஒழிய அப்போது ரியாக்ட் செய்ய மாட்டார்கள்..இப்படியான நம்பிக்கையில்தான் சிலர் மேடைகளில் வரம்பு மீறி பேசுகிறார்கள்.

நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனி மனித தாக்குதலோ அல்லது உருவ கேலியோ சுலபமாக செய்கிறார்கள்.

கலாய்த்தல் என்பதற்கு எல்லை இருக்கிறது. கலாய்க்கப்படுபவரும் ரசிக்கும்படி இருந்தால்தான் அது நாகரிகமான நகைச்சுவை.

எல்லை மீறிய கலாய்த்தல்களை சில ரியாலிட்டி ஷோக்களில் பார்க்கும்போது நமக்கே கோபம் துடிக்கும்.

ஒரு பெண்ணை.. அதுவும் இன்னொருவர் மனைவியை பொதுவெளியில் நகைச்சுவை என்கிற பெயரில் கமெண்ட் அடித்தால் மானமுள்ள எந்தக் கணவனுக்கும் ரோஷம் வரும். ஆனால் எத்தனை பேருக்கு அதே மேடையில் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தத் தோன்றும்? உலகம் முழுதும் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்று திட்டமிட்டு ஒருவர் இதைச் செய்ய முடியாது. இயல்பாக அந்த நிமிடம் தோன்றிய எதிர்வினைதான் இது.

இதில் கோபத்தைவிடவும் அவர் தன் மனைவியின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பும், மதிப்பும்தான் கூடுதலாக வெளிப்படுகிறது.

பலருக்கு மத்தியில் தன் மனைவியை மட்டம் தட்டி ஜோக் அடிக்கும் அத்தனை கணவர்களுக்கும் ஒரு அறையால் பாடம் எடுத்திருக்கிறார். பொதுவெளியில் எப்படிப் பேசக் கூடாது என்பதை அத்தனைப் பேச்சாளர்களுக்கும் ஒரு அறையால் புத்தி புகட்டியிருக்கிறார்.

இந்த அறையின் எதிரொலிகளை விரைவில் உலகம் முழுதும் வேறு பல மேடைகளிலும் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர், எழுத்தாளர்