ரஜினி சார்பில் விஷால் ரா.கி. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முயன்றாரா?

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் சரத்குமார் –கலைப்புலி எஸ்.தாணு ஆகியோரின் அணிக்கு எதிராக, தேர் ஓட்டும் கிருஷ்ணனாக நடிகர் கமல்ஹாசனும், அம்பு விடும் அர்ஜூனனாக விஷாலும் சேர்ந்து செயல்பட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த திரையுலக வட்டாரங்கள், ரா.கி.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்த விஷாலுக்குப் பின்னால் கமல் இருப்பதாக கிசுகிசுத்தன. ஆனால் அத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் மதுசூதனனோ, “விஷாலுக்குப் பின்னால் டிடிவி தினகரன் இருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

விஷாலுக்குப் பின்னால் யார் தான் இருக்கிறார்கள் என்ற பஞ்சாயத்து ஓயாத நிலையில், அவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், விஷாலை வேட்பாளராக முன்மொழிந்ததாக கூறப்பட்ட 2 நபர்கள், தாங்கள் அப்படி முன்மொழியவே இல்லை என்று வாக்குமூலம் அளித்ததால், விஷாலின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..

இதனையடுத்து, “என் அடுத்த கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்” என்றார் விஷால். இந்நிலையில், நட்சத்திர கலை விழாவில் பங்கேற்பதற்காக மலேசியா செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ரஜினியின் தொண்டனாக எல்லா தொகுதிகளிலும் நான் வாக்கு சேகரிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இதனால், ரா.கி.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்ற விஷாலின் முடிவுக்குப் பின்னால் ரஜினி இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது..