“மதவாத அரசியலின் முகம் – ரஜினி”: கருணாநிதியை சந்தித்தபின் திருமாவளவன் விமர்சனம்!

“நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்புகளும், பேச்சுக்களும் அனைவரையும் கவருவதாக இல்லை. அவர் குறிப்பிட்ட ஒரு மதத்திற்காக மட்டுமே பேசுகிறார். அவர் மதவாத அரசியலின் முகமாகவும் இருக்கிறார்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை வெள்ளிக்கிழமை (5ஆம் தேதி) இரவு அவரது கோபாலபுரம் இல்லத்தில் திருமாவளவன் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.

கருணாநிதியை சந்தித்தது குறித்து திருமாவளவன் கூறுகையில், “கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். எங்களை நன்றாக அடையாளம் கண்டார். என் பெயரை உச்சரித்தார். அந்த அளவுக்கு உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருணாநிதி தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலம் மைய நோக்கு விசையாக விளங்கியவர். கருணாநிதியை சுற்றியே தமிழக அரசியல் 1969 லிருந்து இயங்கி வந்தது. இன்று முதுமை காரணமாக உடல் நலிவுற்ற நிலையிலும் அவர் அரசியலை உற்று கவனிக்கிறார்; அரசியல் தலைவர்களை அடையாளம் காண்கிறார்; வாழ்த்து தெரிவிக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் இன்னும் நலமோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். இதை அவருக்கு தமிழர் திருநாள் வாழ்த்துக்களாக தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார் திருமாவளவன்.