“எச்.ராஜா அவர்களே, உங்களுக்கு வெட்கமே இல்லையா?”: விஷால் விளாசல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு தமிழிசை, எச்.ராஜா சரமா, எல்.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற தமிழக பாஜக தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகமே திரண்டெழுந்து செமத்தையாக பதிலடி கொடுத்து வருவதையடுத்து பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எச்.ராஜா சரமா, “’மெர்சல்’ படத்தை இணையத்தில் பார்த்தேன்” என்றார். இதனால், திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

எச்.ராஜா சரமாவின்  இப்பேச்சு குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தைச் சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால் தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து, அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜாவுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?. உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியைப் பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

தங்களது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.