மேடை ஏறாத கலைகளை மேடை ஏற்ற ஒரு மாபெரும் விழா: இயக்குநர் பா.இரஞ்சித் ஏற்பாடு!

0a1bஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத் திருவிழா” நடக்க இருக்கிறது.

வானம் கலைத் திருவிழா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக் குழுவினரின் பாடல்களுடன் தொடங்கிய இந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது:-

கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார். அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறு வயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. மேடை ஏற்றப்படாத பல கலைகளைப் பற்றி நான் யோசிக்கும்போது, அதெல்லாம் கலைகள் இல்லையா என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த கலை விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த கலை விழா யாருக்கும் போட்டிக்காக நடத்தப்படும் விழா என்று நினைத்துவிட வேண்டாம். ஒற்றுமை தான் முக்கியம். கலை வழியே அதை சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம். விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப் பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக் கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப் பேசும் புத்தகங்களைக்கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசை ஆல்பம் “மகிழ்ச்சி” வெளியீடு, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளுடன் வானம் கலைத்திருவிழா நடக்க இருக்கிறது.

கலைகளின் மூலம் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி, அந்த விவாதங்களின் வழியே சமத்துவத்தையும் சமூகநீதியையும் முன்னெடுக்க வேண்டும்; இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த வானம் கலை விழாவின் முக்கிய நோக்கம். டிசம்பர் மாதத்தில் இதை நடத்த மிக முக்கியமான காரணம், இந்த வருடத்தின் கடைசி இரவு விடியும்போது சமூக நீதிக்கான விடியலாக அது இருக்கட்டும் என்று நினைத்தது தான்.

இவ்வாறு பா.இரஞ்சித் கூறினார்.

சென்னை மயிலாப்பூர் சி.எஸ்.ஐ. செயிண்ட் எப்பாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடக்கும் வானம் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக் கட்டணம் எதுவும் கிடையாது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.