நெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்!

ஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கை வேளாண்மையின் அடிப்படையே பாரம்பரிய நெல் விதை ரகங்கள் என்பதை கண்டறிந்த இவர், “கிரியேட்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் பாரம்பரிய விதை ரகங்களை அடையாளம் கண்டறிந்து சேமிக்கத் தொடங்கினார். சுமார் 170 பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்த அவர், அந்த நெல் ரகங்களை சக விவசாயிகளோடு அவற்றை இலவசமாக பகிர்ந்து கொள்ளவும் செய்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள “தணல்” என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் பங்களிப்போடு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் “நெல் திருவிழா” நடத்தி வந்தார். இந்த நெல் திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இயற்கை விவசாயிகள் வந்து சென்றனர்.

இந்த நெல் திருவிழாவிற்கு வரும் எந்த ஒரு விவசாயியும், தமக்குத் தேவையான விதை நெல்லை இலவசமாக பெற்றுச் செல்ல முடியும். அடுத்த ஆண்டு நெல்திருவிழாவிற்கு வரும்போது அவர்கள் பெற்றுச் செல்லும் விதை நெல்லை இரண்டு மடங்காக திரும்பித் தரவேண்டும். இவ்வாறு நெல் திருவிழாவை ஒரு விதை வங்கியாகவும், விதைப் பரிமாற்ற நிகழ்வாகவும் நடத்தினார் நெல் ஜெயராமன்.

இயற்கை வேளாண் நிபுணர் கோ. நம்மாழ்வாரின் மாணவராக விளங்கிய நெல் ஜெயராமன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்தும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த நெல். ஜெயராமன், தமிழ்வேளாண் பல்கலைக் கழகத்தின் இயற்கை வேளாண்மை ஆலோசகராக பணியாற்றியதோடு, அதே பல்கலைக் கழகத்தின் மாணவராகவும் பதிவி செய்து கொண்டு தமது அறிவை நாளும் வளர்த்துக் கொள்வதில் அயராத ஆர்வம் காட்டினார்.

உணவுப் பயிர்களில் மரபணு மாற்றம், விதை வணிகத்தில் அறிவுச் சொத்துரிமை ஆகிய தந்திரங்கள் மூலம் விவசாயிகளின் விதைச் சொத்தை பன்னாட்டு நிறுவனங்கள் களவாடி தமது உரிமையாக்கும் நெறிபிறழ்ந்த செயல்பாடுகளை நெல். ஜெயராமன் முழுவதுமாக உணர்ந்திருந்தார். இதற்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவையும் அளித்து வந்தார். பன்னாட்டு விதை நிறுவனங்களிடமிருந்து உழவர்களை பாதுகாக்க பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதும், அதை உழவர் பெருமக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். உழவர்களிடம் தற்சார்பை வலியுறுத்தியே நெல் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தார். இதன் பயனாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நெல் திருவிழாக்களை பல்வேறு தரப்பினர் நடத்த ஆரம்பித்தனர்.

செயல் ஒன்றே சிறந்த சொல் என்பதை தம் வாழ்வில் நிரூபித்த நெல் ஜெயராமன், அங்கீகாரத்திற்கோ, விளம்பரத்திற்கோ மயங்காமல் இலக்கு நோக்கி பயணித்தவர். ஒன்றிய – மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றவர். எனினும் அரசு விருதுகளுக்காக எந்தப் பணியையும் செய்யாதவர். ஊடகங்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அந்த விருதுகள் அனைத்தும் இயற்கை வேளாண்மைக்கான விருது என்று சமர்ப்பித்தவர்.

பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னையில் நடத்திய சூழல் திருவிழாவில் தமது நெல் ரகங்களை காட்சிப்படுத்தி, நகர மக்கள் சார்பிலும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இத்தகைய ஈடு இணையற்ற நெல் ஜெயராமன், கடந்த இரு ஆண்டுகளாக புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையிலும் நெல் விதை சேகரிப்பு, நெல் திருவிழா குறித்தே கவனம் செலுத்தி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (6.12.2018) அதிகாலை அவர் இயற்கை எய்தியுள்ளார். 50 வயதான நெல் ஜெயராமனுக்கு, மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதும், அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதும் நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் நன்றியாகும். பன்னாட்டு விதை நிறுவனங்களில் நமது நெல் ரகங்களும், நமது விவசாயிகளும் சிக்கிவிடாமல் பாதுகாப்பது நெல் ஜெயராமனுக்கான அஞ்சலி மட்டுமன்றி நமது வாழ்வை பாதுகாக்கும் போராட்டமுமாகும்.

தமிழர் வேளாண் அறிவியலின் விதை நெல்லாக விளங்கிய நெல் ஜெயராமன் இன்று முதல் தமிழர் வேளாண் மரபின் நடுகல்லாக மாறியுள்ளார். அவரது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து அவரது வழி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த அஞ்சலியாக அமையும்.

பூவுலகின் நண்பர்கள்