தமிழ் திரைத் துறையினருக்கு தமிழக அரசு விருதுகள்: அமைச்சர்கள் வழங்கினர்

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்பட்டதால் திரைத்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர். 

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்,  சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை உள்ள திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த நடிகர்களாக 2009 – கரண் (மலையன்), 2010 – விக்ரம் (ராவணன்), 2011 – விமல் (வாகை சூடவா), 2012 – ஜீவா (நீ தானே என் பொன் வசந்தம்), 2013 – ஆர்யா (ராஜா ராணி), 2014 – சித்தார்த் (காவிய தலைவன்) ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

சிறந்த இயக்குநர்களாக 2009 – வசந்தபாலன் (அங்காடி தேர்வு), 2010 – பிரபு சாலமன் (மைனா), 2011 -ஏ.எல்.விஜய் (தெய்வ திருமகள்), 2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), 2013 -ராம் (தங்கமீன்கள்), 2014 -ராகவன் (மஞ்சப்பை) ஆகியோர் விருது பெற்றுள்ளனர். இதேபோல் சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.