வைகை நீரை தெர்மோக்கோல் அட்டைகளால் மூட முயன்று தோற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ!

வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது வறட்சியின் காரணமாக அணையின் நீர்மட்டம் 23.10 அடி. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அணையில் உள்ள நீர் ஆவியாவதன் மூலம் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் குறைவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால், வைகை அணையில் தேங்கியிருக்கும் தண்ணீர் கடும் வெயில் காரணமாக ஆவியாவதை தடுக்க, தமிழக அ.தி.மு.க. அம்மா அணி அரசு சார்பில் புதிய திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி, தண்ணீர் பரப்பின் மேல் தெர்மோக்கோல் அட்டைகளை மிதக்கச் செய்து, நீர் ஆவியாவதை தடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை வைகை அணையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இந்நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்படுவதற்கு முன்பாகவே, நீரில் போடப்பட்ட 300க்கும் மேற்பட்ட தெர்மோக்கோல் அட்டைகளும் கரை ஒதுங்கியதால், அங்கு கூடியிருந்த மக்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

0

தெர்மோக்கோல் அட்டைகள் காற்றின் வேகத்தில் கரை ஒதுங்கியதால் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆட்சியர்கள் உள்ளிட்டோர் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.