ரூ.17.55 கோடி லஞ்சம்: நிர்மலா சீதாராமன் பதவி விலக கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை:-

உக்ரேனிய அரசிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகையில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற புகார் எழும்பியுள்ளது ; இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு 17.55 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற புகாரை அந்த நாட்டின் இலஞ்ச ஒழிப்புத் துறை (National Anti-Corruption Bureau of Ukraine) கூறுகிறது. இந்த விசாரணைக்கு உதவ வேண்டும் என்று உள்துறைக்கு இந்த வருடம் பிப்பிரவரி 13ஆம் நாள் கோரிக்கை விடுத்துள்ளது.அந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்கள், அதன் அமலாக்கத்தில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டறிய வேண்டும் என்று அது கூறுகிறது.

ஏற்கெனவே ராபேல் ஊழல் தொடர்பாக எழுப்பப்பட்ட புகாரை சர்வதேச ஒப்பந்தத்தை காரணம் காட்டி இந்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது; இதில் பிரதம மந்திரி சம்மந்தப்பட்டு இருந்தார். தற்போது கூறப்படுவது அதற்கு அடுத்த பெரிய ஊழலாகும்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.