ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிச.27 மற்றும் 30 தேதிகளிலேயே இரண்டு கட்டங் களாகத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (07-12-2019) மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட் டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்பு இல்லாத சென்னையை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறும்.

இதற்கான தேர்தல் அறிவிக்கை டிச.9ஆம் தேதி வெளியிடப்படும். அன்று காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கும். டிச.16ஆம் தேதி நிறைவடையும்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும். வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.

கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல், கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல் கட்டமாக டிச.27ஆம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் டிச.30ஆம் தேதி 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கும்.

இந்தத் தேர்தலில் நான்கு விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்- இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்- பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்- மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். 2 கிராம ஊராட்சிகளுக்கான பொதுவான வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத் திலும் மற்றொன்றுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இரண்டு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 49,688 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 1 கோடியே 28 லட்சத்து 25,778 ஆண், 1 கோடியே 30 லட்சத்து 43,528 பெண் மற்றும் 1,635 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்தத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் மேல் புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும்.

சென்னை மற்றும் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் தொட ரும். அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.