“கட்சியில் இருந்து தினகரன் குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு”: எடப்பாடி பழனிச்சாமி அணி அதிரடி அறிவிப்பு!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்களால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அம்மா கட்சிக்கும், ஆட்சிக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது. இ ந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. அம்மா கட்சியையும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சியையும் இணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்” என ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து “ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்” என்றார்.

“சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக் கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை” என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை” என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதனிடையே, “அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிக்கிறார்” என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். ம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆட்சியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு ஆட்சி நடத்துவோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

கட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும்” என்றார்.