ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டி: ஸ்டாலின் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்ட்ப்பேரவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், ஓட்டுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி செயலாளரும், பத்திரிகையாளருமான என்.மருது கணேஷ் அறிவிக்கப்பட்டார். மருது கணேஷ் ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதாலும், அப்பகுதியிலேயே பத்திரிகையாளராக இருந்தவர் என்பதாலும் நடந்தே தொகுதி முழுவதும் வலம் வந்தார்.

இந்நிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஜனநாயக முறைப்படி ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது” என்று கூறினார்.