மலேசிய தோட்ட தொழிலாளர் களின் 200 வருட  பிரச்சனையை சொல்லும் ‘தோட்டம்’!

புளூ ஐ புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு ‘தோட்டம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார். நாயகியாகளாக தனா மற்றும் சீன நடிகை விவியாஷான் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அரங்கண்ணல் ராஜ். இவர் இப்படம் குறித்து கூறுகையில், “ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டு தான். இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இதில் அடங்கும். அங்கெல்லாம் விவசாய கூலித் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே.

“அப்படி அவர்கள் உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் பெரும் வணிக சந்தையாகி விட்டன. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அவர்கள் உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை அவர்கள் போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம்.

“அதேபோல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ் பையனுக்கும் சீனப் பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிக்க வேண்டியதன் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.

“மலேசிய நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து ‘தோட்டம்’ படத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் உலகமெங்கும் ‘தோட்டம்’ வெளியாகிறது என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – சதீஷ் பி.சரண்

இசை – சாய்

பாடல்கள் – நா.முத்துக்குமார், அண்ணாமலை, மாணிக்க சண்முகம்

எடிட்டிங் – வினோத்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி

0a