‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது!

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என்று பெயரிட்டுள்ளனர்.

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர் விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ மற்றும் வஜ்ரம் ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமார் வேடத்தில் நடிக்கிறார். வக்கீல் ராம்ராஜ் வேடத்தில் ஏ.வெங்கடேஷ், செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் பென்ஸ் கிளப் சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். கதை, வசனத்தை ஆர்.பி.ரவி எழுதியிருக்கிறார். இவர் ஏற்கெனவே விமல் நடித்த ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ மற்றும்  ‘தற்காப்பு’ போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் கூறுகையில், “நிஜ சம்பங்களை படமாக்கும்போது சுவாரஸ்யத்திற்காகவும், பரபரப்புக்காகவும்  கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் அப்படி எந்த காட்சியும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம்.

“பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம். மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவரது மனமும் திடுக்கிட்டுப் போகும்… இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள்” என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – ஜோன்ஸ் ஆனந்த்

இசை – ஷாம் டி ராஜ்

கலை – ஜெய்சங்கர்

எடிட்டிங் – மாரி

தயாரிப்பு நிர்வாகம் – கே.சிவசங்கர்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி