“சினிமாவை விட்டு விலகிய பிறகும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவியவர் எம்.ஜி.ஆர்”: ரஜினி புகழாரம்!

தென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியது:

நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது, படத்தில் எத்தனை ஃபைட் இருக்கு,  எத்தனை ரீல் படம் என்று தான் பார்ப்பேன்.

ஒரு படத்துக்கு தயாரிப்பாளர் இயக்குனர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானவர்கள் சண்டை கலைஞர்கள்.

எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின்போது கொண்டாடுவது எவ்வளவு பொருத்தம். எம்ஜியார் அவர்கள் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள் பல பேருக்கு மாதச் சம்பளம் கொடுத்து உதவினார்.

சினிமாவில் எல்லோரும் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் வியர்வையுடன் ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள். உயிரை பணயம் வைக்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஆக்‌ஷன் படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் இருக்கு. நீங்கள் சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது காட்டும் அக்கறையை உங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் படிக்க வைப்பதிலும் காட்டுங்கள்.

உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் வந்து கேளுங்கள். என் வீட்டு கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

இந்த விழாவில் சிவக்குமார்,பாலகிருஷ்ணா, மோகன்லால், இயக்குனர் ஷங்கர்,  சூர்யா, கார்த்தி, விஷால் ஜெயம்ரவி, தியாகராஜன், பிரசாந்த்,  சிவகார்த்திகேயன்,  ஜீவா, விக்ரம்பிரபு, விவேக், விஜய்சேதுபதி, ஆர்யா, ஆரி, சிபிராஜ், ஜெகன், மயில்சாமி, டி.பி.கஜேந்திரன், விஷ்ணு மஞ்சு,  சத்யஜோதி தியாகராஜன், தேனப்பன், கதிரேசன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ்,  செளந்தர்யா,  மாலாஸ்ரீ, சித்திராலட்சுமணன், எச்.முரளி, ராஜேஷ், தரணி, எஸ்.ஏ.ராஜ்குமார், காஜலகர்வால், ஸ்ரேயா, டாப்சி நிக்கிகல்ராணி, ரம்யானம்பீசன்,  இனியா, சுஹாசினி,  பூர்ணா,  கேத்தரின் தெரேசா,  ஐஸ்வர்யா ராஜேஷ், எஸ் ஏ சந்திரசேகர்,  பி.வி.பிரசாத் உட்பட ஏராளமானவர்கள்  பங்கேற்றனர்.

விழாவில் மூத்த ஸ்டண்ட் கலைஞர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்களும் கேடயம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள். இந்த மொத்த நிகழ்ச்சியையும் டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருந்தார். ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

யூனியனின் தலைவர் அனல் அரசு, பொருளாளர் ஜான், செயலாளர் செல்வம் மற்றும் எல்லா ஸ்டண்ட் கலைஞர்களும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.