ட்விட்டர் பக்கம் முடக்கம்: கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நன்றி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் நேற்று (மே 31) ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial முடக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டிருந்த பதிவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,”கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை (ட்விட்டரை) முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.