“கருணாநிதி உடல்நிலை குறித்து விமர்சிக்கும் நா.த.க.வினர் மீது நடவடிக்கை”: சீமான் எச்சரிக்கை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து எதிர்மறை கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிடும் நாம் தமிழர் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் ஆளுமையும் திமுக தலைவருமான ஐயா மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து எதிர்மறையான செய்திகளை சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினரின் பெயரில் இயங்கும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள் என்கிற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். ஐயா மு.கருணாநிதி அவர்களின் அரசியல் முடிவுகளோடும், திமுகவின் கொள்கை கோட்பாடுகளோடும் நமக்கு முரண்பாடுகளும், மாற்றுக்கருத்துகளும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதற்காகவே அவர்களை அரசியல்ரீதியாக ஜனநாயக வழிமுறையில் நாம் எதிர்த்தோம். அரசியல் களத்தில் சமரசமின்றி திமுகவின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்தோம்.

தற்போது ஐயா மு.கருணாநிதி அவர்களின் உடல் நலிவுற்ற இப்பொழுதில் அவரது உடல் நலனை முன்வைத்து விமர்சிப்பதையும், அதனை குறித்தும் எதிர்மறை கருத்துகள் தெரிவிப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது. அது அறமோ, அரசியல் பண்பாடோ அல்ல.. ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற சூழலில் அதனை தவறாக பேசியும் விமர்சனப் பதிவுகள் இட்டு பகிர்வதும் மிகவும் தவறான போக்குகளாகும்.

நம் தாய் நிலமான ஈழத்தில் நம் இனத்தைக் கண்முன்னே சாகக் கொடுத்தவர்கள் நாம். இழப்பின் துயரை அணுஅணுவாக அறிந்தவர்கள் நாம்.. வயோதிகத்தின் காரணமாய் நோயுற்று இருக்கும் முதுபெரும் தலைவரைப் பற்றி எதிர்மறை பதிவுகள் இட்டு இன்புறுவது என்பது நாம் பயிற்றுவிக்கும் அரசியலுக்கே எதிரானது. நாம் உருவாக்க முயலும் பண்பாட்டு அரசியல் விழுமியங்களுக்கு முரணானது.

மாற்று எதிர் கருத்து கொண்டோரையும் மதிப்போடு விளித்த வே.பிரபாகரன் அவர்களைத் தலைவராக ஏற்று அரசியல் மாண்பைக் கடைப்பிடிக்கிற நாம் எந்த வகையிலும் பிறர் மனம் வருந்தும் தனிப்பட்ட தாக்குதல்கள் உடைய பதிவுகளை இடுவதோ, பரப்புவதோ கூடாது. அவ்வாறு பதிவுகள் இடுவது நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. அவ்வாறு பதிவிடுபவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்..

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் உடல்நிலை தேறி மீண்டும் அவர் அரசியல் தளத்திலே பணியாற்ற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில், இணையத்தில் இயங்கும் நம் உறவுகள் இத குறித்து மிகுந்த கவனம் கொண்டு, கண்ணியத்தோடும்,அரசியல் நாகரீக மாண்புகளோடும் செயல்படும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.