அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் புதுக்கட்சி தொடங்குகிறார்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், புதிய அரசியல் கட்சி தொடங்கி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அரசியலுக்கான அழைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பு மற்றும் விஷன் 2020 அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர் – மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மாற்றத்துக்கான இளைஞர் கூட்டமைப்பினர், “தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. தரமான கல்வி இல்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். எனவே, ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், ஒழுக்கமான நம்பிக்கைக்கு உரிய தலைமைப் பண்பு கொண்டவர் தலைமையேற்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பேசினார். அப்போது அவர், “கலாமின் கொள்கையான தரமான கல்வி அமைய வேண்டும். தொழில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே, இளைஞர்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்குகிறேன்.

“லஞ்சம், ஊழலற்ற அரசை உருவாக்க நான் அரசியலுக்கு வருகிறேன். ராமேசுவரம், பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று)  அஞ்சலி செலுத்திய பின்னர், புதிய கட்சியின் பெயர், கொடி அறிவிக்கப்படும். இதையடுத்து தேர்தல் பிரசாரம் தொடங்கப்படும்” என்றார்.