பா.இரஞ்சித், மாரி செல்வராஜூக்கு சீமான் கொடுத்த முத்தம்!

இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

p4

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,  திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாக மாறிப்போனார்கள்.

அவர்களில் “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி முன்னே சென்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார். இப்படம் குறித்து சீமான் கூறியதாவது:

நிறைய படம் பார்த்துவிட்டு ‘இது படமல்ல, பாடம்’ என்று சொல்வோம். ஆனால், இந்த “பரியேறும் பெருமாள்” படம் பார்க்கும்போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தைச் சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார். மிகப்பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது.

ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

p3