சானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்!

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படுத்தும் நாப்கின்களை ஆடம்பரப் பொருளாக வகைப்படுத்தி வரி விதிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. அது குருதி கசியும் அந்த நாட்களில் நம் தேசத்தில் 12 சதவீதம் பெண்களே நாப்கினை உபயோகிக்க முடிகிறது. மீதமுள்ள 88 சதவீதம் பெண்கள் இன்றுவரை தங்களின் அந்த ரத்தப் போக்கை மறைக்க கந்தல் துணி, சாம்பல், உமிதூள் ஆகியவற்றோடு சமாளிக்கிறார்கள். எனவே சுகாதாரம், கல்வி, பேச்சு மற்றும் மத சுதந்திரம் எப்படி ஆடம்பரமாக, எல்லோருக்கும் கிட்டாத ஒன்றாகிவிட்டதோ, அதேபோல் இந்த நாப்கின்கள் ஆடம்பரமாகிப் போயின. இந்தியாவில் இளம்பெண்களில் 30 சதவீதம் பேர் பூப்பெய்தியவுடன் கல்விக்கூடம் செல்வதை நிறுத்தி விடுகிறார்கள். அவர்களில் 83 சதவீதம் பேர், மாதவிடாயை எதிர்கொள்ள பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லாதது தான் காரணம் என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

மாதவிடாய் தேர்வு அல்ல, வலி மிகுந்தது

ஆண் உடலில் உள்ள ஹார்மோன் வேதி வினை புரிவதால் எப்படி தாடி வளர்கிறதோ, அதே போல் கரு ஊட்டப்படாத சினை முட்டைகளை புழையின் வழியாக ஒரு பெண் இரத்தமாக கொட்ட வேண்டியுள்ளது. ஈஸ்ட்ரோஜன், பிராஸ்ட்ரோஜன் மற்றும் ஹார்மோனை தூண்டும் ஊக்கிகள் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி சம்பந்தமான ஹார்மோன் ஆகியவையே இரத்தம் வெளியேறும் நிகழ்வுக்கு காரணமாகின்றன. இந்த நடைமுறை இலகுவானதோ, மென்மையானதோ அல்ல. பெரும்பான்மையான பெண்கள் இச்சமயத்தில் கடும் தசைப் பிடிப்பின் துயரத்திற்கு ஆளாகிறார்கள். இவ்வலி மாரடைப்பு வலியை விட மோசமானது என்றும் ஆனால், அதை வெறும் வலிநிவாரணியை கொடுத்து, சாதாரண ஒன்றாக மருத்துவ உலகம் பார்ப்பதாகவும் இத்துறையின் நிபுணரும், லண்டன் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜான் கில்லிபாட் கூறுகிறார்.

இத்துறையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், ஆண்களுக்கு இத்துயரம் இல்லாததால் பெண்களின் இத்துயர் குறித்து போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கருதுகிறார்கள். மருந்தியல் துறையில் கூட ஏற்கெனவே இருக்கின்ற ஸ்டீராய்டு மருந்துகள் தவிர வேறு மருந்துகளை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டவில்லை. இரத்தம் வெளிப்படுத்தும் பெண்கள் தூய்மையானவர்களே. அதை வெளிப்படுத்தாத ஆண்களும் அப்படியே. மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதமின்மை பற்றி பேசும் முன் புனிதம், சுற்றுச் சூழல் சம்பந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றிவிடுங்கள். இதைப் படிப்பதற்கு முன் உங்கள் சாதிச் சாயம் படிந்த மூளையைத் தூர வையுங்கள்.

கோவிலுக்குள் நுழையக்கூடாது. உணவைத் தொடக் கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால், அப்பெண்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் என்று முட்டாள்தனமான தர்க்கத்தை வைக்காதீர்கள். ஆயிரக்கணக்கான பிற வீட்டுப் பணிகளை நீங்கள் ஏவும்போது அவர்களுக்கு அப்போது ஓய்வு தேவை என்று எப்போதும் நீங்கள் உணர்வதில்லை. சில பெண்கள் கூட, உன் அப்பாவிற்கு அருகில் போகாதே, வெளியே விளையாடப் போகாதே, நீ கறைபட்டிருக்கிறாய் என சொல்வதெல்லாம் என்ன?

இவையெல்லாம் ஏன்?

இதில் இயற்கைக்கு மாறாக என்ன இருக்கிறது? என் தந்தை, அவருடைய மனைவி மாதவிடாயின்போது இரத்தம் கசிவதை அறிய மாட்டாரா? ஏன், என் சகோதரன் அவனுடைய சிறு தங்கை இந்த வலியால் துன்புறுகிறாள் என்பதை அறிய மாட்டானா? ஏன் இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வை மர்மமானதாக மாற்றி தேவையற்ற கட்டுப்பாடுகளை என் உடலின் மீது உருவாக்கி என் சொந்த உடலையே நான் வெறுக்கும் நிலைக்கு என்னை கொண்டு செல்கிறீர்கள்? ஆனாலும், நீங்கள் பொது இடங்களில் கழிக்கும் சிறுநீர் பரப்பும் நோய்க் கிருமிகளை விட, என்னுடைய மாதாந்திர இரத்தக் கசிவு அவ்வளவு மோசமானதல்ல.

நாப்கின் என்பது மந்திரத் துணி அல்ல; வெறும் பருத்தி துணியே. நம் சிறுவயதில் நம் அன்னை ஒரு கருப்பு நெகிழிப்பைக்குள் ஏதோ வைத்திருக்கிறாரோ என்கின்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கும். எனக்கு நினைவில் இருந்து அப்படி ஒரு நாப்கினை கிழித்து பார்த்ததில் அப்படி ஒன்றும் அதில் பிரத்யேகமாக காணப்படவில்லை. எனவே, அன்புக்குரிய ஆண்களே, தந்தை வழி சமூகம் நூற்றாண்டுகளாக ஏற்படுத்திய சமூக கட்டுமானமே அந்த கருப்பு நெகிழிக்குள் இருக்கும் நாப்கின் துணியை இளம் பெண்கள் பொது வெளியில் கேட்டு வாங்குவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தவிர வேறல்ல.

மாதவிடாய்க்கு முந்திய அடையாள நிகழ்வுகள் உண்மையே!

மாதவிடாய்க்கு முந்திய அடையாளக் குறியீடுகள் மாத சுழற்சிக்கு உள்ளே நடைபெறும் நிகழ்வுகளின் வெளிப்பாடுகளே. இச்சுழற்சியின்போது உங்களின் ஈஸ்ட்ரோஜன், பிராஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்கள் சமச்சீரற்று இருக்கும். இது மூளையில் பல இரசாயன மாற்றங்களை உண்டாக்கலாம். மூளையில் உங்களை மகிழ்வாக வைத்திருக்கும் செரடோனின் அளவிலும் பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். இந்நேரம் தான் அப்பெண் அதிமுக்கியமாக புரிந்து கொள்ளப்படவும், பேணப்படவும் வேண்டியவள் ஆகிறாள். நட்போடு இயைந்த அன்பனாக அல்லது குடும்பமாக நீங்கள் அப்பெண்ணைப் பேண வேண்டும். இடுப்பு எலும்பின் கீழே ஒரு வலி மிகுந்த தசைபிடிப்பிற்கு ஆளான பெண்ணிற்கு ஏற்படும் உயிரியல் ரீதியான பாடத்தை நீங்கள் புரிந்த கொள்ளல் வேண்டும்.

வலுமிக்க குழந்தை பிறப்பிற்குமாதவிடாயே அடிப்படை உயிரியல் அம்சம்

நான் அறிந்தவரை இந்து பெண்களை குழந்தை பெறும் இயந்திரங்களாக கருதும் சாதுக்களும், யோகிகளும் இது பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் எதார்த்தம் என்னவென்றால், இச்சுழற்சியை சுகாதாரமற்ற முறையில் கையாண்டால் அது குழந்தை கரு உண்டாக்கும் பாதையிலேயே தொற்று ஏற்படுத்தும். அத்தகைய தொற்று கடுமையான பாதிப்பை உண்டாக்கும். இது கரு உருவாவதற்கு முந்தைய சூல்கொள்ளுதல், அதில் ஒவ்வாமை ஏற்படுத்துதல், பிரசவத்திற்கு முந்தைய இறப்பு, கர்ப்ப வாய் புற்றுநோய், தீராத வலி மற்றும் ஆழ் மன நெருக்கடி ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்தியாவில் 50 சதவீதம் பெண்கள் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் 65 சதவீதம் 25 வயது முதல் 35 வயதினர். இவர்களுக்கு சானிட்டரி நாப்கின் என்பவை இந்தியாவில் விலக்கப்பட்டவையாகவே உள்ளன. நம் நாட்டின் தொலைதூர கிராமங்களில் நாப்கின்கள் கிடைக்கும் கடைகளை நீங்கள் பார்க்கவே முடியாது.

திப்ஷிதா தர்

(படத்தில் இருப்பவர் கட்டுரையாளர் திப்ஷிதா தர்: இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு உறுப்பினர்; ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவி)

நன்றி: தீக்கதிர்