“சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு டிக்கெட் கிடைக்கல”: இயக்குனர் மகிழ்ச்சி!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் இணைந்து தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடந்தது.

இயக்குனர்கள் கமல்ஹாசன் பிரியதர்ஷன் ஆகியோரிடம் தொழில் கற்று இந்த படத்தின் மூலம் இயக்குனராகி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் ஐக் பேசும்போது, “பல நண்பர்கள் எனக்கு ஃபோன் பண்ணி டிக்கெட் கிடைக்கல, வாங்கி கொடுங்கணு கேட்டப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. ராதாரவியின் ஆதரவுக்கு ரொம்பவும் நன்றி. எனக்கு வாய்ப்பு கொடுத்த மகேந்திரன், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீக்கு நன்றி” என்றார்.

0a

நடிகர் சூரி பேசும்போது, “ஷூட்டிங்கில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. படத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த வாழை இலை காமெடி காட்சிக்கு நாங்கள் பட்ட பாடு எனக்கும், ஜீவா சாருக்கும் தான் தெரியும். கிளைமாக்ஸ் காட்சியும் மறக்க முடியாத அனுபவம். என் மகள் படம் பார்த்து விட்டு ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பேசினாள். வாசிங் மெஷின் காமெடி சீனுக்கு வரும்போது உள்ளுக்குள்ள பதற்றமா இருந்திச்சு. ஆனா அது தெரியல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ரசிக்கிறார்கள்” என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “ஐக் படம்னு சொன்னவுடனே வேற மாதிரி படமா இருக்கும்னு தான் நினைச்சேன். ஆனா அதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பம், உணர்வுப்பூர்வமான கதையை இயக்கியுள்ளார். மிக பிரமாண்டமான யுவன் சங்கர் ராஜா லைவ் ஷோவை ஐக் தான் இயக்கியிருந்தார். அவ்ளோ பெரிய ஷோவையே நடத்தி முடிச்சவர், ரொம்ப திறமையானவர். இவ்ளோ நடிகர்கள் நடித்திருந்தாலும் 55 நாட்களில் படத்தை முடித்தது ஐக்கின் திறமைக்கு உதாரணம். தம்பி ராமையா தவிர்த்து மற்ற நடிகர்களோடு முதல் முறையா நடிக்கிறேன், அது ஒரு புது அனுபவம். ரசிகர்கள் அவ்வளவு  ரசிக்கிறார்கள், எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விஜய் சிங், அட்லீ ஆகியோருக்கும், ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி” என்றார்.