செல்ஃபி மோக விபரீதத்தைச் சொல்ல விரைவில் வருகிறது ‘சண்டிக்குதிரை’

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘சண்டிக்குதிரை’ என்று பெயரிட்டுள்ளனர்.  இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் அன்புமதி. படம் பற்றி இயக்குனர் அன்புமதி கூறுகையில், “இன்றைய நவீன யுகத்தில் உணவு இல்லாமல்கூட சில நாட்கள் வாழ்ந்துவிட முடியும். ஆனால் சில மணி நேரம்கூட மொபைல் போன் இல்லாமல் பெரும்பாலானவர்களால் சமாளிக்க முடியாது. அந்தளவுக்கு மொபைல் போன் அவசியமாகி விட்டது.

“அதிலும் செல்பி என்னும் மாயை எவ்வளவு பாடாய் படுத்துகிறது? அந்த செல்பி மோகத்தால் ஒரு இளம் ஜோடிக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்பட்டது? அந்த பாதிப்பின் வீரியம் அவர்களின் வாழ்க்கையை எந்தளவு பாதித்தது? என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.

“விஞ்ஞானம் எந்தளவுக்கு உதவிகரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு விபரீதமானதாகவும் உள்ளது என்பது இந்தக் கதையின் முக்கியக் கரு. படம் நிச்சயம் எலோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இது விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார் இயக்குனர் அன்புமதி.

ஒளிப்பதிவு – வீரா

பாடல்கள், இசை – வாரஸ்ரீ

 கலை – கே.எஸ்.புவனா

நடனம் – தினா, சதீஷ்

ஸ்டன்ட் – டென்ச் ரமேஷ்

எடிட்டிங் – ஜூட் தேடன்ஸ்

இணை தயாரிப்பு – பி.பிரகாசம்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி