‘கபாலி’ பார்ப்பதற்காக ஜெய், அஞ்சலிக்கு விடுமுறை கொடுத்த தயாரிப்பாளர்கள்!

ஜெய் நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடிக்கும் படம் ‘பலூன்’. 70 எம்எம் நிறுவனத்தின் உரிமையாளர்கள்  டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர்  தயாரித்துவரும் இப்படத்தை இயக்கி வருகிறார் சினிஷ்.

வலுவான இளம் திறமையாளர்களான ‘பலூன்’ படக்குழுவினர், ‘கபாலி’ படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி அப்படத்தைப் பார்ப்பதற்காக படப்பிடிப்புக்கு  விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ‘பலூன்’ தயாரிப்பாளர்கள், வரும் 22ஆம் தேதி ‘கபாலி’ பார்ப்பதற்காக நாயகன் ஜெய், நாயகி அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் விடுமுறை என அறிவித்துள்ளனர்.

இது குறித்து இப்படத்தின் இயக்குனரும், தீவிர ரஜினி ரசிகருமான சினிஷ் கூறுகையில், “சிறு வயது முதலே ரஜினி சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்த நாங்கள் அனைவரும்,  ஜூலை  22 ஆம் தேதியை ‘கபாலி’ தினமாகவே கொண்டாட முடிவு செய்துவிட்டோம்.  உலகமெங்கும் ‘கபாலி’ படத்தின் வருகையைக் கொண்டாடி கொண்டிருக்க, நாங்களும் அதில் இணையப் போகிறாம்  என்பதை நினைக்கும்போது  பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

“எங்களின் கோரிக்கையை ஏற்று, எங்களுக்கு விடுமுறை அளித்த ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு, படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ‘நெருப்புடா… ‘ என்னும் முழக்கத்துடன் நாங்கள் ஆரவாரமாக ரஜினி சாரின் ‘கபாலி’யை கொண்டாடப் போகிறோம்” என்றார் உற்சாகத்துடன்.