சாய் பிரசாந்த் தற்கொலை: தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது ராதிகா பாய்ச்சல்!

நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு காரணம் என்று யூகிக்கும் விதமாய் பாய்ந்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.

சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது தெருவில் வசித்தவர் நடிகர் சாய் பிரசாந்த் (30). நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ‘இளவரசி’, ‘அண்ணாமலை’, ‘அரசி’, ‘செல்வி’ உட்பட பல சின்னத்திரை மெகா தொடர்களிலும், ‘நேரம்’, ‘தெகிடி’, ‘வடகறி’, ‘ஐந்தாம்படை’ உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் ஞாயிறு இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஏற்கனவே நிரஞ்சனா என்பவருடன் திருமணமாகி விவாகரத்தான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் சுஜிதா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த இரண்டாவது மனைவியும் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த சாய் பிரசாந்த் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தன் மனைவி சுஜிதாவுக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில், “…ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்… என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையையும் கொடுப்பார்கள்… எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு” என்கிற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. சாய் பிரசாந்த் பொருளாதார நெருக்கடியில் இருந்திருக்கிறார்; அதை சமாளிக்க தன் மனைவியின் நகை மற்றும் பணத்தை பயன்படுத்தியிருக்கிறார்; இதனால் கணவன் – மனைவி இடையே மோதலும், பிரிவும் ஏற்பட்டிருக்கிறது; இதில் மனமுடைந்த சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டார் என யூகிக்க இந்த வாசகங்கள் இடமளிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் நடிகை ராதிகாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சாய் பிரசாந்த் தற்கொலை குறித்து ராதிகாவிடம் கேட்டபோது, “சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது. ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகர் அல்லது நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, ஷோவிற்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது.

“இந்த மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்கள் கையெழுத்து வாங்கி கொள்வதால் நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள். சின்னத்திரை என்பது ரொம்ப சின்ன இடம் என்பதால் மிகவும் பொருளாதார சிக்கல் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படுகிறது. நானே நிறைய இடங்களில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ மற்ற நிறுவனங்களின் நாடகங்களில் நடிக்கப் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லியிருக்கிறேன். அதை தடுக்கக் கூடாது என்று நான் நிறைய சண்டையிட்டு இருக்கிறேன். திறமையுள்ள நடிகன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

“சமுத்திரக்கனி தான் என்னுடைய ‘அரசி’ நாடகத்தில் சாயை அறிமுகப்படுத்தினார். என்னைப் பார்க்க நிறைய முறை அலுவலகத்திற்கு வருவான். எனக்கு நன்றி சொல்லியிருப்பதாக சொன்னார்கள். அதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தால் மற்றொரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடிக்க நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று ராதிகா கூறினார்.