“அயோத்தி’ படத்தின் கதை என்னுடையது; திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்!” – எஸ்.ராமகிருஷ்ணன்

சசிகுமார் நடிப்பில், மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘அயோத்தி’ திரைப்படம் பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உயர்ந்த மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கும் இப்படத்தின் கதையை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இப்படக்கதை தங்களுடையது என ஓரிருவர் சமூக வலைத்தளங்களில் உரிமை பாராட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மறுக்கும் வகையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் முகநூல் பதிவு வருமாறு:-

அயோத்தி திரைப்படம்.

சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்.

படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள்.

இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம்.

இவ்வாறு பதிவிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணன், தன்னுடன் சசிகுமார் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.