சிபிஎம் தனித்து போட்டி – வேட்பாளர் லோகநாதன்: ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளாராக லோகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதை அறிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், ஆர்.கே.நகர் பகுதிக்குழு உறுப்பினராகவும் லோகநாதன் செயல்பட்டு வருகிறார்.

”தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று தேவைப்படுகிறது. மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்லவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடவில்லை என்றும், இனி தேர்தல் அல்லாத மக்கள் பிரச்சினைகளில் மட்டுமே ‘மக்கள் நலக் கூட்டியக்கம்’ இணைந்து செயல்படும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

அதாவது, இனி வரும் காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து ஓரணியாக தேர்தலை சந்திக்காது என்பதே திருமாவளவனின் நிலைப்பாடு.