ரஜினியின் “ஆன்மிக அரசியல்” அறிவிப்பு: ‘பகவத்கீதை’யில் தொடங்கி ‘ஜெய்-ஹிந்த்’ல் முடிந்தது!

 ‘பகவத்கீதை’யில் ‘லார்டு’ கிருஷ்ணா ஆரிய மொழியில் உபதேசித்த ஒரு வாசகத்தை (அந்த கர்மத்துக்கு என்ன அர்த்தமோ, தெரியவில்லை) சொல்லி தன ‘அரசியல் நிலைப்பாட்டு உரை’யைத் தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த். அதன்பிறகு இஸ்லாமியர்களின் குரானில் இருந்தோ, கிறிஸ்தவர்களின் பைபிளில் இருந்தோ எந்த மேற்கோளையும் சொல்லாத அவர், தனது அரசியல் “ஆன்மிக அரசியல்” தான் என்றார். இறுதியில், “ஜெய்-ஹிந்த்” என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். இந்நிகழ்ச்சியின் 6-வது நாளான இன்று (டிசம்பர் 31) அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியதாவது:

அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்களைப் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகிவிடுகிறது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் ‘உங்கள் கொள்கைகள் என்ன’ என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன். சோ சார், ‘மீடியாவிடம் ஜாக்கிரதையா இருங்க’ என்று ஏற்கெனவே என்னிடம் கூறியிருக்கிறார். அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவர் எனக்கு பக்கத்தில் இருந்திருந்தால் 10 யானை பலமாக இருந்திருக்கும். அவர் ஆத்மா என்றும் என்னுடன் இருக்கும்.

நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி. அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது அதில் போட்டியிடுவதா, வேண்டாமா என்று அப்போது முடிவு செய்துகொள்ளலாம்.

அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.

அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது.  ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். இந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.

சாதி,மத, பேதமற்ற ஆன்மிக அரசியல் செய்வதே என் இலக்கு. இது சாதாரண விஷயமில்லை. ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது.

எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களைக் கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம். என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.

இவ்வாறு ரஜினி பேசினார்.