அரசியல் பிரவேச அறிவிப்பு: ரஜினிக்கு தமிழிசை, கமல், மு.க.அழகிரி வாழ்த்து!

அரசியலுக்கு வருவதை இன்று உறுதிப்படுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன்’ என்று அறிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ஊழலற்ற, நல்லாட்சி என்ற நோக்கத்துடன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன். ஊழலற்ற நல்லாட்சி என்பதுதான் பாஜகவின் ஒரே நோக்கம்” என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக” என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினின் அண்ணனும், அவரது வாரிசுரிமைப் போர் எதிரியுமான மு.க.அழகிரி, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். விரைவில அவரைச் சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.