”ராகுல் காந்தியை தோற்க டிப்போம்”: கேரள முதல்வர் பினராயி விஜயன் சூளுரை

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, 2-வது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் இந்த முறை போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பினராயி விஜயன் கூறியதாவது:

கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் பெரிய வித்தியாசம் ஏதும் ஏற்படப் போவதில்லை.

ராகுல் பாஜகவை எதிர்ப்பவராக இருந்தால், பாஜக போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டிருக்க வேண்டும், ஆனால், இடதுசாரிகளுக்கு எதிராகப் போட்டியிடுகிறார். இடதுசாரிகளுக்கு எதிராக ராகுல் போட்டியிடும்போது  நாங்களும் கடும் சவாலாக இருப்போம். அவரை தோற்கடிப்போம்.

கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தான் போட்டி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதில் பாஜக எந்தவிதத்திலும் போட்டிக்குள் வராது.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.