“பாகுபலி’யில் இருந்த எமோஷன் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் இருக்கும்!” – இயக்குனர் ராஜமௌலி

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தானய்யா ஆகியோர்  இணைந்து வழங்கும் படம் ஆர்.ஆர்.ஆர் (ரத்தம் ரணம் ரௌத்திரம்)

தெலுங்கு முன்னணி நாயக நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் இந்தி முன்னணி நாயக நடிகை ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஜனவரி 7ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது.

நேற்று (10-12-2021) சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான  பிரமாண்ட முன்னோட்ட விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் என்.வி.பிரசாத், டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜீனியர் என் டி ஆர், நடிகை ஆலியாபட் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தமிழ்குமரன்:

பிரமாண்ட படங்களை தயாரித்து வருவதில் லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் முதன்மையாக இயங்கி வருகிறார். பிரமாண்ட படங்களை இயக்கி வரும் ராஜமௌலியுடன் இணைந்தது மகிழ்ச்சி. நடிகர் ராம் சரண், நடிகர் என் டி ஆர்,  நடிகை ஆலியா பட் ஆகியோரை இங்கு வரவேற்பது மிகவும் மகிழ்ச்சி.

நடிகை ஆலியா பட்:

 நான் என் திரைப்பயணத்தை இங்கு தமிழில் தான் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. RRR படத்தை காண நானும் மிக ஆவலாக இருக்கிறேன். எனக்கு இப்படத்தில் நடித்தது ஒரு கனவு நனவானது போன்று தான் இருந்தது. உங்களுக்கு இப்படம் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும்.

பாலிவுட் படத்தில் மட்டும் நடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. ஒரு இயக்குநர் தான், நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும், இயக்குநரின் பார்வை தான் முக்கியம். நான் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இப்படத்தில் என்னை மிக மிக ஆதரவாக பார்த்து கொண்டார்கள், படத்தில் நடித்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் நடிக்கும்போது ரசிகர்களின் அன்பை பார்த்து மிரண்டுவிட்டேன். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

நடிகர் ராம்சரண்:

 இங்கு வந்து தமிழக ரசிகர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. ராஜமௌலி உடன் எப்போது வேலை பார்த்தாலும் அது சவாலானதாக தான் இருக்கும். அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக தெளிவாக வரையறை செய்திருப்பார். அது எப்படி திரையில் வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். இப்படத்தில் வரலாற்று நாயகர்களை ஹீரோவாக படைத்திருக்கிறார்.அதை திரையிலும் சரியாக கொண்டு வர நாங்கள் உழைத்திருக்கிறோம். படத்தில் வேலை செய்தபோது சில காட்சிகளில் நடிக்கும்போது, என் டி ஆர் ஃப்ரீயாக இருப்பார் அதை பார்த்தபோது, அவரது கேரக்டரை நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி, இப்படத்தில் தமிழில் பேசியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள்.

நடிகர் ஜூனியர் என் டி ஆர்:

உங்களுடன் கலந்துரையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜமௌலி எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுவே எனக்கு பயத்தை தந்தது. ஒரு நடிகருக்கு இயக்குநர் நம்புவதை தருவது சவாலானது. அதை எங்களால் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறோம். எனக்கும் ராம்சரணுக்கு தோன்றிய எண்ணம் தோன்றியது. நான் கஷ்டப்பட்டு ஷூட்டிங் செய்யும்போது அவர் பேக்கப் பண்ணி போய்கொண்டிருப்பார், என்னை விட்டுட்ட்டு போறியா இரு நானும் வர்றேன் என்பேன். படம் முழுக்க வேலை பார்த்ததே, மிக புதிதான அனுபவமாக இருந்தது. பாகுபலி இந்தியா முழுதையும் ஒன்றாக்கியது எந்த நடிகரும் எந்த மொழியிலும் நடிக்கலாம். விஜய் சாரின் மாஸ்டர் படம் தெலுங்கில் மிகபெரிதாக வெற்றி பெற்றது. ஒரு நாள் இந்திய அளவில் ஒரு பிரமாண்ட படம் உருவாகும், அதில் நாங்கள் எல்லோரும் நடிக்கலாம். தென்னிந்திய சினிமா பிறந்தது சென்னையில் தான். சிரஞ்சீவி சார் பிறந்ததே இங்கு தான். தமிழுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மறுக்கமுடியாதது. இப்படத்தில் கார்கி, விஜய் மிகச்சிறப்பாக எங்களுக்கு தமிழ் சொல்லி தந்தார்கள். தமிழை சரியாக கஷ்டப்பட்டு பேசியிருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி:

நாம் எவ்வளவு பெரிய ஆளானாலும் படிச்ச ஸ்கூலுக்கு வந்தா பயமா இருக்கும். அது மாதிரி தான் சென்னை எனக்கு, சினிமா கற்று தந்தது சென்னை தான். அந்த பயம் எனக்கு இருக்கிறது. ஒரு பெரிய படம் என்பதை எடுக்கும்போதே யாரும் நிர்ணயிக்க முடியாது. நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் தந்து படத்தை உருவாக்குகிறோம், இறுதியில் ரசிகர்கள் தான் படத்தை பெரிய படம் என்று சொல்ல வேண்டும். இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ரஜினி சாரை வைத்து படமெடுக்க நீங்கள் சொல்வதில் எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு கதை எழுதி அதில் யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவரை நடிக்க வைக்க வேண்டும், கதை தான் நாயகனை தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாகுபலி எல்லோருக்கும் பிடிக்க காரணம் அதன் மொழி அல்ல, அதன் எமோஷன் தான்.  அதேபோல் ஆர்.ஆர்.ஆர் பாகுபலியைவிட எமோஷனலாக ரசிகர்களை ஈர்க்கும். ராம் சரண், என் டி ஆர், ஆலியா பட் எல்லோருக்கும் சமமான திரை அனுபவத்தை தருவது ஒரு படைப்பாளனாக எனக்கு சவாலாகதான் இருந்தது. ஆனால் என் கதை அதை செய்திருக்கிறது. ராம்சரண், என் டி ஆர் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களை கதை எழுதிய கணத்தில் தான் முடிவு செய்தேன். இந்த இரு கேரக்டர்களும் வரலாற்றில் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். அதுவே கேட்க அதிசயமாக இருந்தது. வரலாற்றில் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்த நாயகர்கள், உண்மையில் அவர்கள் சந்தித்ததில்லை, சந்தித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப்படம்.

போஸ்ட் புரொடக்சன் மட்டும் ஒன்றரை வருடம் செய்திருக்கிறோம். நான் இந்தப்படத்தை தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் தான் எடுத்திருக்கிறேன். என் சிந்தனை தெலுங்கு அதை மாற்ற முடியாது. ஆனால் தமிழில் நடக்கும் கதையை இயக்கும்போது, இங்கு வந்து கண்டிப்பாக இயக்குவேன். பாகுபலி மாதிரி நினைத்து வராதீர்கள் என்று சொல்லவில்லை ரசிகர்கள் மனதில் இருந்து பாகுபலியை மறக்கடிக்க முடியாது. பாகுபலியில் உள்ள எல்லாம் இதில் இருக்காது ஆனால் அதில் இருந்த எமோஷன் இந்தப்படத்திலும் இருக்கும். ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடுவார்கள்

தொழில்நுட்ப குழு:

திரைக்கதை, இயக்கம் – எஸ்.எஸ்.ராஜமௌலி

கதை – விஜயேந்திர பிரசாத்

வசனம் – கார்கி

இசை – எம்.எம்.மரகதமணி

ஒளிப்பதிவு – கே.கே.செந்தில்குமார்

படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்

மக்கள் தொடர்பு – நிகில்