கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’

லட்சுமி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பெட்டிக்கடை’. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான  புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக அவர் நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக ‘மொசக்குட்டி’ வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் – அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி, ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரநாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்

ஒளிப்பதிவு  –   அருள், சீனிவாஸ்

 இசை  –   மரியா மனோகர்

பாடல்கள்  –   நா.முத்துக்குமார், சினேகன்,  இசக்கி கார்வண்ணன்

நடனம்  –   வின்செண்ட் விமல்

 ஸ்டண்ட்  –   மிராக்கிள் மைக்கேல்

எடிட்டிங்  –  சுரேஷ் அர்ஸ்

கலை  –   முருகன்

தயாரிப்பு மேற்பார்வை – செல்வம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – இசக்கி கார்வண்ணன்

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக ‘அண்ணாச்சி’, ‘பாய்’ என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம். அந்த தெருவில் நடக்கும்  நல்லது கெட்டதுகளுக்கு  அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி, வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவுச் சங்கிலி இருக்கும்.

இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள். சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவுச் சங்கிலி அறுபட்டது என்பதையும், கார்ப்பரேட்  அட்டூழியத்தையும் தோலுரித்துக் காட்டும் படமே பெட்டிக்கடை. இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது” என்றார்.