“ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா நிச்சயம் கலாட்டா செய்வார்கள்”: விஷால் அச்சம்!

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்ற  பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா ஆகிய  இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.

விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முதல் முறையாக படத்தின் பாடல்களை பென்டிரைவில் வெளியிட்டனர்.

விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் சார்லி, அசோக், நடிகை ரோகிணி,  இயக்குனர்கள் பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம், கார்த்திக் சுப்புராஜ், கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர்  சுகுமார் மற்றும் ‘ஒரு கனவு போல’ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

0a

விழாவில் விஷால் பேசுகையில், “நான் இந்த விழாவிற்கு நடிகர் சௌந்தர்ராஜாவும், ராமகிருஷ்ணனும் அழைத்ததால் தான் வந்தேன். ஆனால் பொதுவாக நான் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன். இந்த விழாவிற்குத் தான் வந்திருக்கிறேன். இப்போது ஆரியா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா எல்லோரும் எங்கள் பட விழாக்களில் கலந்துகொள்ள வரவில்லை என்று நிச்சயமாக கலாட்டா செய்வார்கள். அதனால் இனி அவர்கள் விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.

சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றி அடைகின்றன. என் படம் வெற்றியடைந்தால் விஷால் மட்டும் தான் பேசப்படுவான். ஆனால் ‘ஒரு கனவு போல’ மாதிரியான படங்கள் வெற்றி பெற்றால் தான் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெற்றி கிடைக்கும்” என்றார் விஷால்.