‘காக்கா முட்டை’ இயக்குனரின் புதிய படம் ‘கடைசி விவசாயி’!

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன், அதனை  தொடர்ந்து ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். தற்போது தனது அடுத்த படைப்பான  ‘கடைசி விவசாயி’ படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்க இருக்கிறார்.

ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருக்கும் இந்த ‘கடைசி விவசாயி’ படத்தில்,  70 வயது நிரம்பிய முதியவர் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வேடத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தும் நபரை தற்போது  படக்குழுவினர் தேடி வருகிறார்கள். தமிழ் ரசிகர்களிடையே நன்கு பழக்கப்பட்ட முகங்கள் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்  சாகர் சத்வானி கூறுகையில், “ஒருபுறம்  கோலா தொழிற்சாலைகளும், கார்ப்பரேட்  நிறுவனங்களும் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்க, மறுபுறம் விவசாயிகள்  தற்கொலை செய்துகொள்வது நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. நம்முடைய அன்றாட வாழக்கைக்கு தேவையான உணவை வழங்கும் விவசாயிகள் தற்போது வாழ்க்கையிலும் சரி, விவசாயத்திலும் சரி, சரிந்துகொண்டே போகிறார்கள்.

“கடைசி விவசாயி’ படத்தின் கதையை இயக்குனர் மணிகண்டன் எங்களிடம்  சொன்ன அடுத்த கணமே, இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துவிட்டோம். சட்டத்தின் சிக்கலான விதிமுறைகளால் குழம்பிப்போன ஒரு சராசரி விவசாயி,  எப்படி அந்த சிக்கல்களை புரிந்துகொண்டு அதிலிருந்து வெளியே வருகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்கரு.

“சமுதாய அக்கறையோடு உருவாக இருக்கும் இந்த  ‘கடைசி விவசாயி’ படத்தில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற காமெடி, காதல் என பல சிறப்பம்சங்களும் இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பக் கூடிய படமாக இது இருக்கும்” என்றார்.