மீண்டும் அதே கம்பீரத்துடன் நடிகர் நெப்போலியன்!

1991ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பில் முத்திரை பதித்தவர் நடிகர் நெப்போலியன்

நடிகர், சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெப்போலியன் சில காலம் தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னர், தற்போது தனது இயல்பான கலையான நடிப்பில் மீண்டும் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கு வல்லவன்’,  சசிகுமார் தயாரித்து நடிக்கும் ‘கிடாரி’, குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்க ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் ‘முத்துராமலிங்கம்’, இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ஜெயபிரதாவுடன் ‘சரபா’ (தெலுங்கு) உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நெப்போலியன்.

புது பொலிவுடன் தனக்கே உரிய அதே கம்பீரத்துடனும் உத்வேகத்துடனும் தற்போது நடித்து வரும் நெப்போலியனுக்கு தமிழ் மொழியில் மட்டுமன்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.