”13 தமிழர்களை கொலை செய்த வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுப்பதா?”
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2019/05/0a1a-18.jpg)
”தூத்துக்குடியில் 13 தமிழர்களை கொலை செய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பதா? மத்திய – மாநில அரசுகளே, உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை ரத்து செய்” என்று திருமுருகன் காந்தியின் மே பதினேழு இயக்கம் வற்புறுத்தியுள்ளது.
இன்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் 59,282 சதுர கி.மீ. பரப்பளவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலம் விடப்பட்டதில் ஆகஸ்டு 28 2018 அன்று 41 இடங்களை வேதாந்தா ஏலம் எடுத்தது. இதில் தமிழகத்தில் 3 இடங்களில் வேதாந்தா 2 இடங்களை எடுத்தது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் 1-10-2018 அன்று கையெழுத்தானது, ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வாலிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கினார்.
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா சுற்றுச்சூழல் அனுமதிகோரி 3 ஏப்ரல் 2019 அன்று விண்ணப்பம் அளித்திருந்தது.இன்று (11-5-2019) எண்ணெய் கிணறுகள் அமைக்கயுள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்ய வேதாந்தாவிற்கு 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்து மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அனுமதி தந்துள்ளது.
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் நிலம், நீர், காற்று என அத்தனையையும் உயிர்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு மாசு ஏற்படுத்தி மக்களின் உடல்நலத்தையும் கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியது. அதனால் தான் நீதிமன்றமே 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இப்படிப்பட்ட நிறுவனத்திடம் இருந்து மக்களை காக்க வேண்டிய,அரசு தற்போது அவர்களுக்காக அடியாள் வேலை பார்க்கிறது.
மத்திய அரசின் OALP (Open Acreage Licencing Policy) திட்டம் அடிப்படையிலே வேதாந்தா நுழைந்துள்ளதால் ஹைட்ரோ கார்பன் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் நிலத்தடி புதைம எரிபொருட்கள் முழுவதையும் கொள்ளையடிக்க முடியும்.
இதனை தெரிந்துகொண்டதால் தான் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறியுள்ளார். தமிழக அரசும் அனுமதிக்கமாட்டோம் என உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டுமென்று மே பதினேழு கேட்டுக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.