தீபிகா படுகோனே தலையை எடுப்பவருக்கு ரூ.10 கோடி பரிசு: பாஜக தலைவர் அறிவிப்பு!

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

“ராணி பத்மினி வேடத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம்” என்றும், “அவரது தலையையோ அல்லது படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும்” எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரியானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு பேசுகையில், தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்த மீரட் இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டார். “அவர்களுடைய தலையை எடுப்பவருக்கு நாங்கள் ரூ.10 கோடி பரிசு வழங்குவோம், அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதியையும் நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம்” என்றார். மேலும், “பத்மாவதி’ படத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” எனவும் அவர் கோரியுள்ளார்.

ரத்தக்காட்டேரியான இந்த பாஜக தலைவரின் அறிவிப்பு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.