‘மெரினா புரட்சி’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கியது சிங்கப்பூர் அரசு!

2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் இந்திய அரசு தணிக்கை சான்று தரவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர்.

இதனை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில், “வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ‘மெரினா புரட்சி’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும்” என்று இந்நிறுவனம் கோரியுள்ளது. இது தொடர்பாக தணிக்கைத் துறைக்கு  நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளா.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசு ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது. சிங்கப்பூர் அரசின் தணிக்கைப் பிரிவான Info communications Media Devolpment Authorities ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம்” என்று குறிப்பிட்டிருக்கிறாரகள்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் இதயங்களுக்கு ‘மெரினா புரட்சி’யை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது.