மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் – விமர்சனம்

நடிப்பு: மோகன்லால்,ப்ரணவ் மோகன்லால், அர்ஜுன், பிரபு, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர்

எழுத்து, இயக்கம்: பிரியதர்ஷன்

தமிழ்நாடு வெளியீடு: ’ வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி எஸ்.தாணு

ஒளிப்பதிவு: திருநாவுக்கரசு

15ஆம் நூற்றாண்டின் இறுதியில் – அதாவது 1498ஆம் ஆண்டு – போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா கடற்பயணம் மேற்கொண்டு, பீரங்கி முழக்கத்துடன், முதல் ஐரோப்பியனாக இந்தியாவை – கேரளக் கடற்கரையை – வந்தடைந்தார். அப்போது முதல் போர்ச்சுக்கீசிய படையினருக்கும் கேரளாவின் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்தன. அக்காலகட்டத்தில் – அதாவது 16ஆம் நூற்றாண்டில் – கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதியாக விளங்கி வீரசாகசங்கள் புரிந்தவர் குஞ்சாலி மரைக்காயர். அவரது உண்மைக்கதையை கொஞ்சம் புனைவுகள் கலந்து ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த முகமது அலி என்ற குஞ்சாலி மரைக்காயர்,  அம்மாவின் (சுஹாசினி) செல்லப்பிள்ளையாக வளர்கிறார். இவருக்கு திருமணம் நடப்பதற்கு முதல் நாள், மணப்பெண்ணான ஆயிஷா (கல்யாணி பிரியதர்ஷன்) உட்பட மொத்த மரைக்காயர் குடும்பத்தினரையும் போர்ச்சுகீசியப் படைகளின் உதவியுடன் எதிரிகள் படுகொலை செய்கிறார்கள்.

இந்த தாக்குதலில் தனது சித்தப்பாவுடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல வாழ்கிறார் குஞ்சாலி மரைக்காயர். ஆட்சியாளர்களிடமிருந்து உணவு தானியங்களை கொள்ளையடித்து ஏழைகளுக்கு கொடுக்கிறார். யார் கண்ணிலும் படாமல் ஒரு நிழலைப் போல ஆள்பவர்களை ஆட்டுவிக்கிறார்.

போர்ச்சுகீசியப் படைகளை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர் குஞ்சாலி மரைக்காயரின் உதவியை நாடுகிறார். தனது சிற்றரசர்கள் சிலரின் எதிர்ப்பையும் மீறி மரைக்காயரோடு கைகோர்க்கிறார். எதிரிகளின் கடற்படைகளை வீழ்த்தி அரசவையில் கடற்படை தளபதியாகவும் பொறுப்பேற்கிறார் குஞ்சாலி மரைக்காயர்.

இதனிடையே மரைக்காயருக்கும் சாமுத்ரி அரசவைக்கும் இடையில் ஆர்ச்சாவின் (கீர்த்தி சுரேஷ்) காதலால் விரிசல் ஏற்படுகிறது. இதன் பின்னர் என்னவானது என்பதே ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ படத்தின் கதை.

1

குஞ்சாலி மரைக்காயராக வருகிறார் மோகன்லால். கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி சின்ன சின்ன அசைவுகளில் கூட அசத்துகிறார்.

நெடுமுடிவேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பெரடி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். இவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இளவயது குஞ்சாலி மரைக்காயராக வரும் ப்ரணவ் மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பலவீனம். படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். இதற்கு துணையாக நின்ற கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோருக்கு பெரிய பாராட்டுகள். அதுபோல், படத்தில் போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

படத்துக்கு ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல் ஆகியோர் பின்னணி இசையமைத்து இருக்கிறார்கள். ஒரு வரலாற்றுப் படத்துக்கு எது தேவையோ அதைக் கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.

‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’- பிரமாண்டத்தை, மேக்கிங்கை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.