“வீதிநாடக கலைஞராக இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றவர் தோழர் பூ ராமு”: முதல்வர் இரங்கல்

பிரபல குணசித்திர நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள்.

பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.

தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பூ ராமு காலமான செய்தியறிந்து, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்ந்த நடிப்பாலும், சிறந்த கதாபாத்திர தேர்வாலும் முக்கியமான படங்களில் பணியாற்றி பாராட்டை பெற்ற குணச்சித்திர நடிகர் அண்ணன் ‘பூ’ராமு அவர்களின் மறைவு கலையுலகிற்குப் பேரிழப்பு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அண்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.