பிரபல குணச்சித்திர நடிகர் பூ ராமு மறைவெய்தினார்

இதயப் பிரச்சனை காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குணச்சித்திர நடிகர் பூ ராமு மறைவெய்தினார். அவருக்கு வயது 60.

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு முன்னாள் உறுப்பினரான ராமு, கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்தவர். எனினும், 2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதன் காரணமாக அவர் தனது பெயருக்கு முன்னால் பூவை சேர்த்து’ பூ ராமு’ ஆனார்.

 அதன்பிறகு ’தங்கமீன்கள்’, ’நீர்ப்பறவை’, ’பரியேறும் பெருமாள்’, ’கர்ணன்’, ’சூரரை போற்று’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் சில படங்களில் பூ ராமு நடித்து வந்துள்ளார்.

நடிகர் பூ ராமு இதய பிரச்னை காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

பூ ராமு மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.