சிறையில் வாடும் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு அவரது பிள்ளைகள் எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம்!

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி அரசின் பங்கை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடும் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு, அவரது பிள்ளைகள் ஆகாஷி பட் மற்றும் சாந்தனு பட் ஆகியோர் எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம் :

                ——————————————————

அன்புள்ள அப்பா!

உங்களன்பு ஆகாஷியும் சாந்தனுவும் எழுதிக்கொள்வது…

மீண்டும் ஒரு வருடம் ஓடிவிட்டது…

இது, போராட்டக களத்தில் இன்னுமொரு நாள்…

இதை எழுதும்போது, நாம் இருவரும் இரண்டு எதிரெதிர் உலகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறோம்! மகிழ்ச்சியும் நெருக்கமும் நிறைந்த ஒரு உலகம் போய்விட்டது. இன்று நாம் ஒருவருக்கொருவர் பிளவுபட்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், இந்த பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் பாதையில் நிற்கிறோம்!

இரண்டு நாட்களுக்கு முன்புதான், இந்த ஈவிரக்கமற்ற ஆட்சி நம்மைப் பிரித்த நான்காவது ஆண்டின் தந்தையர் தினம் கடந்துபோனது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாங்கள் இந்த கடிதம் எழுதும்போது, நீங்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. செய்யாத குற்றத்திற்காக நீங்கள் 5 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறீர்கள்.

இந்நாட்களில் நாம் ஒன்றாகக் கொண்டாடிய தந்தையர் தினத்தின் பழைய நாட்களின் நினைவலைகளால் சூழ்ந்திருந்தோம். எங்கள் வாழ்க்கை முடிவில்லாத கனவாகிப்போன ஜூன் 20ஆம் தேதியை நோக்கி என் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

2019, ஜூன் 20-ன் நினைவுகள் என்னை மூழ்கடித்தன; இந்த ஆட்சியால் சிதைக்கப்பட்ட நீதிமன்றம், விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே முடிவை முன்கூட்டித் தீர்மானித்துவிட்டது. உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் அதை அப்பட்டமாகப் புறக்கணித்த நீதிமன்றம் எந்த ஆதாரங்களையும் பரிசீலிக்காமல், எதிர்தரப்பு சாட்சிகளைக்கூட அழைத்து வர அனுமதிக்காமல், தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தியது.

இரண்டு அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காக நீதித்துறையே முற்றாக கேலி செய்யப்பட்டு உங்கள் குரல் நசுக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, நாங்கள் மற்றொரு கொடூரமான விசாரணையை எதிர்கொள்கிறோம். எப்படியாவது உங்களை மௌனமாக்க அரசாங்கம் வேறு சில முயற்சிகளை மேற்கொள்கிறது.

கடந்த ஒவ்வொரு வருடமும், நாம் பிரிந்திருந்த இந்த நாட்களை நினைவில் வைத்து நான் இந்தப் பதிவுகளை எழுதுகிறேன். என்றேனும் ஒருநாள் நீங்கள் விடுதலையாகி நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் அவற்றை படித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன். அன்று இந்த இருண்ட நாட்கள் நாம் மறக்க நினைக்கும் பழைய நினைவுகளாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அதற்காகவே இந்த எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். அனைத்தையும் அன்றைக்கு நேரடியாகச் சொல்ல முடியாது அல்லவா. சொல்ல முடியாமல் போன வார்த்தைகள், அனுபவிக்க முடியாமல் போன தருணங்கள், உருவாகியிருக்க வேண்டிய நினைவுகள்… அனைத்தையும் இங்கே எழுதுகிறேன்.

அப்பா, நானும் ஷானும் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நீங்களாக இருக்க முயற்சி செய்கிறோம். எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம். நீங்கள்தான் எங்கள் தைரியம். எங்கள் இதயங்களில் பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் குரல், எங்களுக்கு வழிகாட்டும் தாரகை, எங்கள் இதயத் துடிப்பு…. உங்களை நாங்கள் தந்தையாக பெற்றதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

இன்று, பொய்வழக்கு சுமத்தப்பட்ட நான்காவது ஆண்டையும், உங்களை பழிவாங்கும் நோக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஐந்தாவது ஆண்டையும் அனுசரிக்கும் இந்நாளில் செய்வதறியாது திகைத்து நிற்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

நாங்கள் ஒரு குடும்பம் என்ற நிலையிலும் ஒரு தேசம் என்ற நிலையிலும் உங்கள் விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டோம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

குரலற்றவர்களையும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் நீங்கள் பாதுகாத்தீர்கள். ஆனால், பாதுகாவலரைப் பாதுகாக்கும் நேரம் வந்தபோது, நீங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாத்த அதே சமூகம், காது கேளாதவர்களைப் போல் கள்ள மௌனத்தில் ஆழ்ந்திருக்கிறது. அலட்சியமும், பயமும், சில சமயங்களில் பேராசையும் அவர்களை முடக்கிப் போட்டது. ஆனாலும் இருபது வருடங்களுக்கும் மேலாக நீங்கள் தைரியமாக, இடைவிடாமல் போராடினீர்கள், ஆனால் நாங்கள்தான் உங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

ஒரு நேர்மையான அதிகாரியாக இருப்பதில் எங்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருந்தும் இந்த போரில் நாங்கள் அமைதியாக இருந்து தோற்றுவிட்டோம்.

இந்த 21 ஆண்டுகளுக்குப் பிறகும், நாங்கள் அடிபட்டு, காயங்களுடன் இரத்தம் வழிய நிற்கிறோம். ஆனால் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும், இனப்படுகொலைக்குத் திட்டமிட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவும் நீங்கள் காட்டிய துணிச்சல் அசாத்தியமானது; பாராட்டுக்குரியது.

இந்த நாள் உங்கள் அநியாய சிறைவாசத்தின் 1750-வது நாளைக் குறிக்கிறது.

நீதிக்கான எங்கள் போராட்டம் இனியும் தொடரும்..

நீங்கள் எப்போதும் சொல்வதுபோல்:

நாம் போராடுவோம்,

நாம் எதிர்ப்போம்,

நாம் வெல்வோம்…

என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!

தந்தையர் தின வாழ்த்துகளோடு

ஆகாஷி & சாந்தனு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் :

ஜாபர் சாதிக் பாக்கவி

 (Via – Barakath Ali)